ஓபிஎஸ் சம்பந்தி செல்லப்பாண்டியனின் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவி அதிரடியாக பறிப்பு
சென்னை: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சம்பந்தி செல்லப்பாண்டியனிடம் இருந்து அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் கை ஓங்கியிருந்தது. இதனால் கோவில்பட்டி வழக்கறிஞரான மகளின் மாமனார் செல்லப்பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவியை வழங்கினார் ஓபிஎஸ்.
கடந்த ஆட்சிக் காலத்தின் முடிவில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா செக் வைக்க தொடங்கினார். அதன் பின்னர் அவருக்கு எல்லாமும் இறங்குமுகம்தான்... சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதும் நிதித்துறை அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது. இம்முறை பொதுப்பணித்துறை இலாகா கொடுக்கப்படவில்லை.
அதேபோல் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டனர். இந்த நிலையில்தான் ஓபிஎஸ்-ன் சம்பந்தியான செல்லப்பாண்டியனிடம் அதிமுக தலைமை ராஜினாமா கடிதம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பன்னீர்செல்வம் நியமித்த அரசு வழக்கறிஞர்கள் சிலரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது,.