ஜெ. மகன் என வழக்கு போட்ட ஈரோடு வாலிபர்.. ஜெயிலுக்கு அனுப்பிருவேன்.. மிரட்டிய நீதிபதி!
ஜெயலலிதாவின் வாரிசு என்று வழக்கு போட்ட ஈரோடு வாலிபரைப் பார்த்து பொய் வழக்கு போட்டால் நேராக சிறைக்கு அனுப்பி விடுவேன் என்று ஹைகோர்ட் நீதிபதி எச்சரித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் மகன் தான்தான் என்றும் அவரது வாரிசு தான்தான் என்றும் வழக்கு போட்ட ஈரோடு வாலிபர் கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் உள்ள ஒரிஜினல் ஆவணங்களுடன் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்பு ஆஜராக வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொய் வழக்கு போட்டால் நேராக சிறைக்கு அனுப்பி விடுவேன் என்றும் ஹைகோர்ட் நீதிபதி எச்சரித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தற்போது புது புகாருடன் கிளம்பியுள்ளது புயலை கிளப்பியுள்ளது. ஆனால் இதை நம்பாத உயர்நீதிமன்ற நீதிபதி ஒரிஜினல் ஆவணங்களுடன் நேரில் காவல்துறை ஆணையர் ஜார்ஜை சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,32. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகன் ஆவேன். நான் 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம்தேதி பிறந்தேன்.
தத்து கொடுத்த ஜெயலலிதா
நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1986ஆம் ஆண்டு காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்துக் கொடுத்து விட்டனர். இதற்கான ஒப்பந்தத்தில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டுள்ளனர்.
சசிகலாவிற்கு தெரியும்
ஈரோட்டில் தத்து எடுத்த பெற்றோருடன் வசித்தாலும், அடிக்கடி சென்னை வந்து என் தாயார் ஜெயலலிதாவை சந்திப்பேன். கடந்த மார்ச் மாதம் அவரை சந்தித்த போது, என்னை தன் மகன் என்று செப்டம்பர் மாதம் அறிவிக்கப் போவதாக ஜெயலலிதா கூறினார். இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார். இவையெல்லாம் தற்போது கர்நாடகா மாநில சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்றாக தெரியும். இதனால், ஜெயலலிதாவுடன் அவர் தகராறு செய்தார்.
கடத்தி அடைத்து வைத்தனர்
இந்த நிலையில், என் தாயார் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5ஆம்தேதி அவர் மரணமடைந்தார். என் தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களும் என்னை அனுமதிக்கவில்லை. டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில், அடையாளம் தெரியாத சிலர் என்னை கடத்திச் சென்று, சிறுதாவூர் பங்களாவில் அடைத்து வைத்து கொடுமை செய்தனர். அந்த பங்களாவில் வேலை செய்யும் காவலாளியின் உதவியுடன் அங்கிருந்து தப்பி வந்தேன்.
டிராபிக் ராமசாமி
அதன்பின்னர் என்னுடைய நலவிரும்பிகள் கொடுத்த யோசனையின் அடிப்படையில், டிராபிக் ராமசாமியை கடந்த மாதம் இறுதியில் சந்திக்க சென்றேன். இதை தெரிந்து கொண்ட சசிகலாவின் ஆட்கள், என்.எஸ்.சி. போஸ் சாலையில் வைத்து என்னை தாக்கினார்கள். இதில் நான் படுகாயமடைந்தேன்.
இதன்பின்னர் கடந்த 11ஆம்தேதி டிராபிக் ராமசாமியை சந்தித்து, சசிகலாவுக்கு எதிராக போராடி, என்னுடைய உரிமையையும், என் தாயாரின் சொத்துக் களையும் மீட்டுத் தரும்படி கேட்டேன்.
உயிருக்கு ஆபத்து
டிராபிக் ராமசாமி கொடுத்த அறிவுரையின்படி, தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 12ஆம்தேதி புகார் மனுவை அனுப்பினேன். தேனாம்பேட்டை போலீசாருக்கும் தனியாக புகார் மனு அனுப்பப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், என்னை தத்து எடுத்துள்ள பெற்றோருக்கும் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. தற்போது சசிகலாவின் ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் தற்போதைய முதல்வரிடம் செல்வாக்கு உள்ளவர்கள். எனவே, எனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
கண்டித்த நீதிபதி
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மனுவை விசாரித்து பார்த்த நீதிபதி, இந்த மனுவை பார்த்தாலே பொய் வழக்கு என்று தெளிவாக தெரிகிறது. தத்துக் கொடுக்கும் பத்திரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கையெழுத்து போட்டார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி, ஆமாம். அவர்கள் போட்ட கையெழுத்து தான் இது என்றார்.
விளையாட வேண்டாம்
இந்த தத்துக் கொடுத்த பத்திரம் என்று தாக்கல் செய்துள்ளீர்களே, இதை ஒரு எல்.கே.ஜி. மாணவனிடம் கொடுத்தால் கூட, அவன் இது பொய்யான பத்திரம் என்று தெளிவாக கூறி விடுவான். இந்த உயர்நீதிமன்றத்தை உங்களது தனிப்பட்ட விளையாட்டுக்கு பயன்படுத்துகிறீர்களா' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இதுபோல விளையாடினால் இங்கிருந்து நேராக ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்று கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து சொன்னார் நீதிபதி.
ஒரிஜினல் எங்கே?
1986ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, கையை கூட அசைக்க முடியாத நிலையில் இருந்தார். இது தெரியுமா? அவர் வந்து கையெழுத்து போட்டாரா? ஜெயலலிதா உள்ளிட்டோர் கையெழுத்திட்ட ஒரிஜினல் தத்து பத்திரம் எங்கே? என்று நீதிபதி கேட்டார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி தற்போது அதை எடுத்து வரவில்லை என்றார்.
வழக்கு ஒத்திவைப்பு
ரோட்டில் கிடைத்த ஜெயலலிதாவின் புகைப் படத்தை எடுத்து, அதில் உன் படத்தை ஒட்டி போலி ஆவணங்களை தயாரித்துள்ளது நன்கு தெரிகிறது. உன்னிடம் உள்ள ஒரிஜினல் ஆவணங்கள், புகைப்படம், தத்து பத்திரம் என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்பு சனிக் கிழமை காலையில் ஆஜராக வேண்டும். இவரது ஆவணங்களையும், இவரை விசாரித்து வருகிற திங்கட்கிழமை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன் என்றார் நீதிபதி.
டிராபிக் ராமசாமிக்கு எச்சரிக்கை
இந்த வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு என்ன தொடர்பு? பொதுநல வழக்குகளை தொடர்ந்து தமிழகத்துக்கு பல அற்புதமான பணிகளை செய்துள்ளீர்கள்? இது போன்று வழக்கு போட்டு உயர்நீதிமன்றத்துடன் விளையாடாதீர்கள். அப்படி செய்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று நீதிபதி எச்சரிக்கை செய்தார்.
அதற்கு டிராபிக் ராமசாமி, ‘என்னிடம் வந்து கிருஷ்ணமூர்த்தி முறையிட்டார். ஆவணங்களை கொடுத்தார். இவர் ஜெயலலிதாவின் மகன் என்று சொல்கிறார். அதனால் உதவி செய்தேன். இதை உயர்நீதிமன்றத்தில் முடிவுக்கு விட்டு விடுகிறேன். உண்மை எது என்று இந்த நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யட்டும் என்றார்.
எத்தனை பேர் கிளம்புவாங்க
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அவரது மரணத்தில் பல்வேறு மரணங்கள் இருப்பதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இப்போது அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் உண்மை வாரிசு என்று கூறி புதிதாக ஒருவர் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.