அம்மா உணவகங்கள், மருந்தகங்கள், பருப்பு விற்பனைத் திட்டம்... தொடங்கி வைத்தார் ஜெ.
சென்னை: தமிழகம் முழுவதும் கட்டி முடித்து திறப்பு விழாவுக்காக காத்துக் கிடக்கும் 150 அம்மா உணவகங்கள் மற்றும் அம்மா இலவச மருந்தகங்களை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னையில் மட்டும் 50 அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டன. அதேபோல காஞ்சிபுரத்தில் 13 உணவகங்கள் திறக்கப்பட்டன.
மேலும் வேறு சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். 7 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு முடிவடைந்த நலத் திட்டங்களை இன்றுதான் தொடங்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த அம்மா உணவகம். அம்மா திட்ட வரிசையில் முதல் திட்டம் இந்த அம்மா உணவகம்தான்.
இதற்கு ஏழைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், வேலைக்குச் செல்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 207 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் எப்போதும் போல கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் மேலும் 50 அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.
மேலும் 100 அம்மா உணவகங்களை திறக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அதில், 50 அம்மா உணவகங்கள் கட்டி தயாராக உள்ளன. 60 முதல் 70 அம்மா உணவகங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. சுமார் 40 அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் நிலம் மற்ற அரசு துறைகளில் இருந்து பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ள 50 அம்மா உணவகங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் ஜெயலலிதா இடையில் 7 மாதமாக முதல்வராக இல்லாத காரணத்தால் அவற்றைத் திறக்காமல் வைத்திருந்தனர். ஜெயலலிதா இல்லாத நிலையில் அவற்றைத் திறக்க மேயர் சைதை துரைசாமியும் விரும்பவில்லை.
பருப்புத் திட்டம்
தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி விட்டதால் கட்டி முடிக்கப்பட்ட இவற்றை திறக்கப்பட்டுள்ளது. இதேபோல வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரை கிலோ துவரம் பருப்பு 53.50 ரூபாய்க்கும், அரை கிலோ உளுந்தம் பருப்பு ஏ ரகம் 56 ரூபாய்க்கும், பி ரகம் 49.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் புதிய திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மேலும், காவல்துறைக்கு புதிய வாகனங்களையும், கடலோர பாதுகாப்பு படையினருக்கான ரோந்து வாகனங்களையும் அவர் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 அம்மா உணவகங்களும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.
சென்னை தவிர மதுரை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளிலும், அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல நகராட்சிகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இவை தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் உள்ளிட நகராட்சிகளில் அம்மா உணவகத்துக்கான கட்டுமானப்பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் காஞ்சிபுரத்தில் 2, தாம்பரம் 2, பல்லாவரம் 2, மறைமலைநகர் 2, பம்மல், அனகாபுத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளில் தலா 1 என்ற வீதத்தில் மொத்தம் 13 உணவகங்கள் ஒரே மாதிரியான கட்டட வடிவமைப்பில் கட்டி முடிக்கப்பட்டன. இவை அனைத்தும் இன்று திறக்கப்படவுள்ளன.