75 நாட்கள் சிகிச்சை பெற்று உயிர் பிரிந்த அப்பல்லோவுக்குள் அன்று உள்ளே நுழையக் கூட அனுமதிக்கப்படாத ஜெ
சென்னை: ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் வடிக்கிறது... இரும்புப் பெண்மணி முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்காக... இந்திய அரசியலில் மிகப் பெரும் சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் சில மறக்க முடியாத சம்பவங்கள்..
1982-ம் ஆண்டு அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ஜெயலலிதாவுக்கு அடுத்த ஆண்டே கொள்கை பரப்புச் செயலர் பதவியை வழங்கினார் எம்.ஜி.ஆர். அதிமுகவில் அப்போது எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான பெருந்தலைகள் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், ஹண்டே, கே.ஏ. கிருஷ்ணசாமி, எஸ்.டி. சோமசுந்தரம், பொன்னையன் என பலரும் இருந்தனர்.
இவர்கள் யாருக்குமே ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டு வந்தது பிடிக்கவில்லை. ஜெயலலிதாவை அதிமுகவில் இருந்து வெளியேற்றியே தீர வேண்டும் என முனைப்புகாட்டிய அணிக்கு தலைமை தாங்கியவர் ஆர்.எம். வீரப்பன். இவர்களின் சகுனி ஆட்டங்களில் சில நேரம் ஜெயலலிதா வீழ்ந்தது உண்டு. ஆனால் ஒருபோதும் நிரந்தரமாக ஒதுங்கிப் போக மறுத்தார் ஜெயலலிதா.
எஸ்.டி.எஸ்...
தம்மை வீழ்த்தியவர்களை வெல்ல வேண்டும் என்ற வேகம், அதற்கான விவேகம்தான் அவரிடம் இருந்தது. 1984-ம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார் எம்.ஜி.ஆர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டே வெளியே போனார் எஸ்.டி. சோமசுந்தரம்... இதே எஸ்.டி. சோமசுந்தரம்தான் பின்னாளில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் தொங்கிக் கொண்டு வந்த 'கதாபாத்திரம்'...
அன்றைய அப்பல்லோவுக்குள்...
அப்பல்லோவில் உடல்நலக் குறைவால் எம்ஜிஆர் பாதிக்கப்பட்ட போது அதற்கு ஜெயலலிதாவே காரணம் என எதிர்ப்பு கோஷ்டி பிரசாரம் செய்தது. அப்பல்லோ மருத்துவமனைக்குள் ஜெயலலிதாவை அந்த கோஷ்டி அனுமதிக்கவே இல்லை. அதே அப்பல்லோவில் தான் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டார் ஜெயலலிதா என்பது வரலாற்றின் விசித்திரம்தான்..
ஆபாச பேச்சு
ஜெயலலிதாவுக்கு15,000 எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆதரவு இருப்பதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் ஜெயலலிதா குறித்து ஆபாசமாக பேசியதுடன் எம்ஜிஆர் உடல்நலக் குறைவுக்கும் அவரே காரணம் என குற்றம்சாட்ட பெரும் சர்ச்சையாகிப் போனது.
காளிமுத்து...
வீரப்பனின் சிஷ்யபிள்ளையாக இருந்தவர் அப்போதைய வேளாண் அமைச்சரான காளிமுத்து. ஜெயலலிதாவிடம் இருந்து கொள்கை பரப்புச் செயலர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டபோது அதை மிகக் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்தவர் காளிமுத்து.
முசிறிபுத்தன்...
அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத் தலைவராக முசிறிபுத்தனோ ஜெயலலிதாவை சிபிஐ உளவாளி என விமர்சித்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக 103 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டுள்ளதாக பேட்டி கொடுத்தனர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட நினைத்தது வீரப்பன் அணி.
அதிமுகவின் தலைவராக...
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் காலச்சக்கரம் சுழன்றது. அதிமுக இரண்டாக உடைந்து பின்னர் மீண்டும் இணைந்தது. ஜானகி அணியை வழிநடத்தினார் வீரப்பன். 1989 தேர்தலில் ஜானகி அணி படுதோல்வி அடைய அந்த அணியினர் ஜெயலலிதாவின் தலைமை ஏற்றனர். அரசியலில் இருந்து ஓய்வு நிலைக்கு போன நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைந்தார்.
அரசியலில் காணாமல் போயினர்...
ஜெயலலிதாவை பரம எதிரி; சிபிஐ உளவாளி; காங்கிரஸின் கையாள் என சகட்டுமேனிக்கு விமர்சித்த காளிமுத்துவும் ஜெயலலிதா தலைமை ஏற்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம். நடராஜன், அப்போது அரசியலை விட்டு விலகி இருந்த ஆர்.எம். வீரப்பனை சந்தித்து பேசினார்... 'அனைத்தையுமே' மறந்து போயஸ் தோட்டம் போய் அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் வீரப்பன். ஆனால் வீரப்பன் உட்பட அனைத்து எம்ஜிஆர் காலத்திய தலைவர்களையும் எப்போதும் ஜெயலலிதா நம்பியதில்லை. இதனால் அவர்களில் பெரும்பாலானோர் காலப்போக்கில் அதிமுகவில் இருந்து மட்டுமல்ல.. அரசியலிலேயே அடையாளம் இல்லாமல் போயினர்.