'மக்களின் முதலமைச்சர் ஜெயலலிதா..' புகழாரம் சூட்டிய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மக்களின் முதலமைச்சர் என்று தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் வித்யாசாகர் ராவ் பாரட்டுத் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மக்களின் முதலமைச்சர் ஜெயலலிதா என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள் கிழமை இரவு இவ்வுலகைவிட்டு பிரிந்தார். அவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் , அவர்களது மேம்பாட்டில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், மக்களால் மிகவும் கவரப்பட்ட தலைவர் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்து ஞாயிற்றுக்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு இந்திய தேசத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு என்று தனது இரங்கல் செய்தியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்க வந்த தமக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்பு அளித்த தருணங்களை மறக்க இயலாது என்றும் வித்யாசாகர் ராவ் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.