ஜெயலலிதா வழக்குகளை தகர்தெறிந்து மீண்டும் முதல்வர் ஆவார்: சரத்குமார்
நாகர்கோவில்: ஜெயலலிதா அந்த வழக்கை உடைத்தெறிந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். ஜெயலலிதா நிச்சயம் விடுதலை ஆவார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கு, தீர்ப்பு பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். இது நிரந்தர தீர்ப்பு அல்ல. உயர்நீதிமன்றம் இருக்கிறது. உச்சநீதிமன்றம் இருக்கிறது. நிச்சயமாக ஜெயலலிதா அந்த வழக்கை உடைத்தெறிந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். ஜெயலலிதா நிச்சயம் விடுதலை ஆவார். ஜாமீனில் அவர் விடுதலையானது சந்தோஷமாக உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இது இரட்டை தீபாவளி.
ஜெயலலிதாவை களத்தில் வெல்ல முடியாதவர்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லி 356-வது பிரிவை பயன்படுத்த பார்க்கிறார்கள். அது நிறைவேறாது. அ.தி.மு.க.வினர் தங்களது ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தினர். உணர்வுகளை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் மக்களாட்சி நடந்து வருகிறது. மீனவர் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கவர்னர் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய கருத்துக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பொம்மை ஆட்சி என்று கூறுவதை ஏற்கமுடியாது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக நிர்வாகம் செய்ய தெரிந்தவர். ஏற்கனவே நிர்வாகம் செய்துள்ளார்.
ஹூட் ஹூட் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தன்னிச்சையாகவே மேற்கொண்டுள்ளார். இவரை எப்படி அவ்வாறு சொல்ல முடியும்?
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்கிற யூகம், யூகமாகத்தான் இருக்கும். யார் முதல்வர் என்பதை அவர்களால் சொல்ல முடியாது. ஏற்கனவே ஒருவர் நான்தான் முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
எந்த வலுவான கூட்டணியும் அ.தி.மு.க. கூட்டணியுடன் போட்டி போட முடியாது. கடந்த லோக்பா தேர்தலில் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றார்