ஆர்.கே.நகரில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முந்துகிறார் ஜெயலலிதா - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது.
கடந்த 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பின்னர் தனது பதிவியை இழந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரனார்.
இத்தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 9,710வாக்குகளையும் பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட 27 பேரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது. இன்று வெளியான சென்னை மண்டத்திற்குட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஜெயலலிதா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு குறைந்த அளவிலான மக்களை சந்தித்தே இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டாத தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றி சதவீதம் மிக குறைந்த அளவில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, அதிமுகவுக்கு 38.3 சதவீத ஆதரவு காணப்படுகிறது. திமுக கூட்டணிக்கு 37.7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 4.9 சதவீத ஆதரவை மக்கள் அளித்துள்ளனர். பாமக 1.7 சதவீத ஆதரவுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.