நட்சத்திர ஹோட்டல் விருந்து... ஜெயம் ரவி மீது தாக்குதல்?
நட்சத்திர ஹோட்டல் விருந்தில் பங்கேற்றுத் திரும்பியபோது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது உறவினர் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவியின் உறவினர் ஜாய் ஆனந்த், அவரது நண்பர்கள் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு விருந்துக்குச் சென்றுள்ளனர்.
ஹோட்டலை விட்டுப் புறப்பட்டபோது மதுரையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான சுதர்சன் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஜெயம் ரவி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
அங்கிருந்த காவலாளிகள் சண்டையை தடுத்திருக்கிறார்கள். இந்த தாக்குதலில் ஜெயம் ரவி உறவினர் ஜாய் ஆனந்துக்கு காயம் ஏற்பட்டதாம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாய் ஆனந்த், போலீஸில் சுதர்சன் அண்ணாதுரை மீது புகார் கொடுத்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்தபோது ஜெயம் ரவியும் அங்கு இருந்தாகத் தெரிய வந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளதாம்.
இந்த மோதலில் ஜெயம் ரவியும் தாக்கப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.