சசிகலா வீடியோ கிராபிக்ஸ் அல்ல... அவர் ஷாப்பிங் போகவில்லை - ஜெயானந்த்
சசிகலா சிறையில் இருந்து வெளியே செல்லவில்லை. பார்வையாளர்களை பார்க்க சென்றிருக்கலாம் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே ஷாப்பிங் சென்று வரவில்லை. சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சென்று பார்த்து விட்டு வந்திருக்கலாம் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா,அங்கு மற்ற கைதிகளைப் போல இல்லாமல் சொகுசாக இருந்ததற்கான புதிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
சசிகலா, வெளியே சென்றுவிட்டு மெயின் கேட் வழியாக மீண்டும் சிறைக்கு திரும்பும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆதாரங்களையும் சேர்த்து, மொத்தம் 74 ஆதாரங்களை கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சில புகைப்படம், வீடியோ ஆதாரங்களை, அவர் விசாரணை அதிகாரியிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரி ரூபா கூறும்போது, "ஆண் காவலர்கள் பெண்கள் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறையின் வெளியில் பிரதான வாயிலில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். எங்கிருந்து சசிகலா வந்தார். அவரை யார் அனுமதித்தார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்று ரூபா கூறியுள்ளார்.
ரூபா கொடுத்துள்ள வீடியோ ஆதாரங்களில், சாதாரண உடையில் சசிகலா, இளவரசி சிறையைவிட்டு வெளியே சென்று, கைப்பையோடு திரும்பும் காட்சிகள் இருப்பதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு வலுவாக மாறியுள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு கையில் பையுடன் திரும்பும் வீடியோ காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவையாக இருக்கும் என்று டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் கூறி வந்தனர். இதனிடையே இப்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சி உண்மையானவைதான் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
சிறைக்குள் இருந்து சசிகலா வெளியே சென்று வர வாய்ப்பேயில்லை என்றும், அவர் சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சந்திக்க சென்ற போது பதிவான காட்சிகளாக இருக்கலாம் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பு நிறைந்த சிறை வளாகத்திற்குள் இருந்து இருவர் மட்டுமே எப்படி வெளியே சென்று விட்டு வர முடியும் என்றும் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.