தென்காசியில் நகை திருட்டு: 4 பெண்கள் கைது; 147 பவுன் நகைகள் மீட்பு
தென்காசி, நெல்லையில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: நெல்லை அருகே தென்காசியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 147 பவுன் திருட்டு நகைகள் மீட்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் சிலர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகளிடம் நகைகளை திருடுவதை இந்த கும்பல் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்த ராமலட்சுமி, பிரியா, கல்யாணி என்ற கலா, கோகிலா என்ற விஜியா ஆகிய நான்கு பெண்கள் தென்காசி உள்ள துணிக் கடை ஒன்றில், குழந்தையிடம் தங்க சங்கிலியை திருடிய போது கையும், களவுமாக பிடிப்பட்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை தென்காசி போலீசிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி போலீசார் பிடிப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் நெல்லை, காயல்பட்டிணம், பாலபாக்கியா நகர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நான்கு பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 147 பவுன் நகைகளை மீட்டனர். இவர்கள் இது போல வேறு யாரிடமும் நகை-பணம் திருடியுள்ளனரா என்று தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.