தஞ்சை: ஜான்பாண்டியன் கார் மீது கல்வீச்சு... விழாவில் கலவரம்
தஞ்சாவூர்: பாபநாசம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் பங்கேற்ற விழாவின் போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். 3 இருசக்கர வாகனங்கள், கார், போலீஸ் வாகனம் ஆகியவை சேதமடைந்தன.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியப் பகுதிகளில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அதன் தலைவர் பெ. ஜான்பாண்டியன் மது விலக்கு பிரசாரம் மற்றும் கட்சிக் கொடியேற்றும் விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். இதையொட்டி, அம்மாபேட்டை அருகே அகரமாங்குடி, வடக்குமாங்குடி கிராமங்களில் ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் தங்களது கட்சித் தலைவரை வரவேற்கும் விதமாக அலங்கார வளைவுகள், தோரணங்கள், வரவேற்பு தட்டிகள் ஆகியவற்றை அமைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அங்கு வந்த வேறு ஒரு தரப்பினர் ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். பிறகு, அது கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர்.
அந்த நேரத்தில், மக்கள் முன்னேற்ற கழக தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் தியாக. காமராஜ் அங்கு காரில் வந்தார். அவரது காரும் தாக்கப்பட்டது. இதில் காரின் முன்கண்ணாடி உடைந்துநொறுங்கியது.
அவரது காரை தொடர்ந்து வந்த ஜான்பாண்டியன் காரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த வழியாக வந்த அம்மாபேட்டை அதிமுக ஒன்றிய துணைச் செயலாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான பி. குணசேகரன் காரும் தாக்கப்பட்டதில், அவரது கார் கண்ணாடியும் உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து இருதரப்பினரும் மாறி மாறி, கல்வீசிக்கொண்டனர்.
அப்போது ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் 2 மோட்டார் பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்கள், போலீசாரின் ஜீப் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஜான்பாண்டியன் தரப்பை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜான்பாண்டியன் தரப்பை சேர்ந்தவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எஸ்.பி. தர்மராஜ், ஜான்பாண்டியனிடம் பேச்சு நடத்தி அங்கிருந்து அவரை பாதுகாப்பாக தஞ்சைக்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.