தீபா திடீர் வருகை.. ரணகளமானது போயஸ் கார்டன்... பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடந்த நிகழ்வுகளை படம்பிடித்து செய்தி சேகரிக்க சென்ற ஆங்கில சேனல் பத்திரிக்கையாளர்கள் மீது கடுமையாக பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை
சென்னை: போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு அவரின் அண்ணன் மகள் தீபா தனது கணவர் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்றார்.
அதனைப் படம்பிடித்து செய்தி சேகரிக்க சென்ற ஆங்கில சேனலின் ரிப்போர்ட்டர் மற்றும் கேமிராமேன் மீது தனியார் பாதுகாவலர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கேமிராமேனுக்கு முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில், செய்தியாளரின் மண்டை உடைந்தது.
அத்தையின் வீட்டைச் சொந்தம் கொண்டாடி தீபா வந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே அங்கு அவரின் அண்ணன் தீபக் இருக்கிறார் என்பதை அறிந்த பிறகு தீபா கொந்தளித்துள்ளார். ஆனால் அவரை உள்ளே விடாமல் தடுக்கப்பட்டதால் தீபா போலீஸாருடனும் தனியார் பாதுகாவலர்களுடனும் வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும் தீபாவின் ஆதரவாளர்கள் அதிக அளவில் அங்கே குவிந்துள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தினகரன் உள்ளிட்ட சசிகலா சொந்தங்கள் ஜெயலலிதாவின் வீட்டை ஆக்கிரமித்துள்ளனர் என்று கூறி வந்த தீபக் மற்றும் தீபா நாங்கள் விரைவில் ஜெ. வீட்டுக்குள் நுழைவோம் என்று அடிக்கடி பேட்டிகளில் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்துக்குள் சென்றுள்ளனர். இதனால் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் குதித்துள்ளதால் அங்கே பதற்றம் நிலவுகிறது.