சாத்தூர் அருகே பத்திரிகை நிருபர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச் செயல் !
சாத்தூர் அருகே பத்திரிகை நிருபவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர்: சாத்தூர் அருகே நவீன நெற்றிக்கண் வார இதழ் நிருபர் கார்த்திகை செல்வன் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியைச் சேர்ந்தவர் கார்த்திகை செல்வன் (40). இவர் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நவீன நெற்றிக்கண் வார இதழின் நிருபராக பணியாற்றி வந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சாத்தூர் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் பங்குதாரராகவும் கார்த்திகை செல்வன் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஓட்டல் வெளியே பங்குதாரர் குருசாமியுடன், கார்த்திகை செல்வன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது டூவீலர் மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திகை செல்வனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது.
ரத்த வெள்ளத்தில் துடித்த கார்த்திகை செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சாத்தூர் போலீசார், கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.