ரயிலில் நீதிபதி தகராறு செய்யவில்லையாம்.., அநியாயத்தை தட்டிக்கேட்டாராமே!
திருச்சி: காரைக்குடி குடும்ப நல நீதிபதி ஒருவர், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயணித்தபோது, டிடிஆருடன் குடி போதையில் தகராறு செய்ததாக கூறி ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் சுற்றி வந்தது.
இதனிடையே, இந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் ஒரு தகவல் வாட்ஸ்அப்பில் ரவுண்ட் அடிக்கிறது. அந்த மெசேஜில் கூறியுள்ளதாவது:
நீதிபதி முறைப்படி ரிஷர்வேஷன் கோச்சில் பயணம் செய்துள்ளார். ரிஷர்வேஷன் கோச்சில் அதிகப்படியான வெளியாட்கள் ஏறி அமர்ந்துள்ளனர். இது முறையாக பயணம் செய்யும் பயணிகளுக்கு தொல்லையாயிருந்துள்ளது. அதனால் முன்பதிவு செய்து பயணித்து வந்த பயணிகள் கண்டித்து கேள்வி கேட்டுள்ளார். முறைகேடாக பயணிந்தவர்கள், முன்பதிவு பயணிகளை சண்டைக்கிழுத்துள்ளனர். விஷயம் தெரிந்தவர்கள் ஒதுங்கிவிட்டனர். ஏனெனில் இது அடிக்கடி நடப்பது.
ஏறிய ஆட்கள் ரயில்வே யூனியன் ஆட்களாக இருப்பதால் எப்போதும் போலீசும் டி.டி.ஆரும் நமக்கு எதற்கு வம்பு என்று கண்டு கொள்ள மாட்டார்களாம். நீதிபதி இதை சக, பயணிகளுக்காக தட்டி கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
வந்த டி.டி.ஆரும், யூனியன் ஆட்களுக்கு ஆதரவாக நீதிபதியை முறைத்து ஐ.டி கார்டு கேட்டுள்ளார். நான் ஒழுங்காக பயணிக்கும் பயணி தப்பு செய்தவர்களை முறைப்படி தட்டிக் கேட்டு நடவடிக்கை எடுக்காமல் என்னிடமே ஐ.டி கேட்டால் என்ன அர்த்தம் என்று நீதிபதி சண்டை போட்டுள்ளார். இப்போது இது நீதிபதி தவறு செய்தது போல் திசை திருப்பப்படுகிறது.
இவ்வாறு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் பரவி வருகிறது. ஆனால் பொதுவாக முன்பதிவு செய்யாத பயணிகள் சாதாரண கோச்சில்தான் ஏறிக்கொள்வது வழக்கம். சண்டை நடைபெற்றது ஏசி கோச் போல வீடியோவில் தெரிந்தது. எனவே இந்த வாட்ஸ்அப் மெசேஜின் நம்பகத்தன்மையில் கேள்வி எழுந்துள்ளது.