ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்! அரசை விமர்சித்தால் அடிதானாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டு போராட்ட பெண்மணி ஜூலியானா சக போட்டியாளர்களால் சீண்டலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது நாள் நிகழ்வுகளில் சில காட்சிகள் விஜய் டிவி குட்டி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளது.
அதில் ஜூலியானாவிடம், நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
யாரால் அடி வாங்
"மெரினாவில் கடைசி நாளில் யாரால் அடி வாங்குனாங்க.." என ஆர்த்தி கேட்கிறார். "இவங்களாலதான்.." என காயத்ரி சொல்கிறார். ஜூலியானாவோ "அப்படித்தான் சொல்கிறார்கள்" என கூலாக கூறுகிறார். மெரினாவில் போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போலீசாரால் தடியடிக்கு உட்படுத்தப்பட்டு, பெரும் கொடுமைக்கு உள்ளான சம்பவத்தைதான் இப்படி சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள்.
விமர்சித்தால் தடியடி
சசிகலா குறித்தும், பன்னீர்செல்வம் குறித்தும், கலாசலா, கலசலா, சின்னம்மா, சின்னம்மா, ஓபிஎஸ்ச எங்கம்மா என்பது போன்ற கோஷங்களை எழுப்பியவர் ஜூலியானா. இவரால் ஆட்சியாளர்கள் கோபமடைந்துதான் தடியடி நடத்தினர் என்ற கோணத்தில் இந்த விவாதம் நடக்கிறது. விமர்சனங்களுக்கு அடிதான் பதில் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள் காயத்ரியும், ஆர்த்தியும்.
வாக்குவாதம்
"நான் திட்டுனது மூனே மூனு தலதான்.." என கூறுகிறார் ஜூலியானா. அதற்கு ஆர்த்தியோ, "பர்சனலா நீங்க ஒருத்தர் பேரச் சொல்லியே பாயிண்ட் அவுட் பண்றீங்க" என்கிறார். ஜூலியானோவோ, பாயிண்ட் அவுட் பண்றது தப்பில்லையே என்கிறார். ஆக, அதிமுகவின் ஆர்த்திக்கும், ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானாவுக்கும் இன்று பெரும் வாக்குவாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
அட்வைஸ் செய்யும் பாஜக நடிகை
காயத்ரி ரகுராமோ, ஜூலியானாவை பார்த்து, ஜல்லிக்கட்டுக்காக போராடினால், ஜல்லிக்கட்டுக்காக மட்டும் போராடனும், என்று அட்வைஸ் செய்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஆட்சியாளர்கள் குறித்து அதிலும் பிரதமர் மோடி குறித்தும் விமர்சனங்கள் முன் வைத்ததைதான் பாஜகவிலுள்ள காயத்ரி ரகுராம் இவ்வாறு கண்டித்து பேசுகிறார் என புரிந்துகொள்ள முடிகிறது.
போராளி என்று கூறியதில்லை
இந்நிலையில், ஆர்த்தியும், காயத்ரியும், தொடர்ந்து ஜூலியானாவிடம் வாக்குவாதம் செய்வதை போல காட்சிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் நான் போராளி என்று இதுவரை சொல்லியதேயில்லையே என கூறுகிறார் ஜூலியானா. தமிழ் தொலைக்காட்சி சேனல் ரியாலிட்டி ஷோக்களில் நடப்பு அரசியல் பேசப்படுவது என்பது நடைபெறாத நிகழ்வு. ஆனால், கமல் நடத்தும் நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ, சமகால அரசியல் பேசப்படுகிறது. ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஈடுபாடுடன் உள்ள பொதுமக்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.