பரணியிடம் மனக்குமுறல்களை கொட்டிய ஜூலி !
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி, தனது மனக்குமுறல்களை பரணியிடம் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 15 பேர்களில் ஜூலியும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியையே ஆளாளுக்கு குறி வைக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவரை விரட்டிவிட அங்குள்ளவர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய காட்சிகள் இரவு ஒளிபரப்பானது.
அண்ணன், அக்கா என்று கூப்பிட்டால் தப்பா, பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டுமா... எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று ஜூலி, பரணியிடம் கூறினார். அதற்கு பரணி, நீ என்னை அண்ணன் என்று கூப்பிடுவது தான் பிடித்திருக்கிறது. ஆனால் எல்லோரும் என்னைப்போல் இருக்க மாட்டார்கள். உன்னை எல்லோரும் டார்கெட் பண்ணும் போது, நீ எல்லோரையும் திருப்பி அடி என்று பரணி கூறினார்.
இதனிடையே சாப்பாடு கெட்டுப்போனது குறித்து குக்கிங் டீம் தெரிவிக்கவில்லை என்று ஓவியா அணி குற்றம் சாட்டியது. இதனால் கோபமடைந்த காயத்ரி ரகுராம், ஓவியா போன்ற எச்ச கூட வரமாட்டேன் என்று அப்பவே சொன்னேன் என்று கூறியது பரபரப்பை கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து தங்களின் முதல் காதல் குறித்து ஆரவ், கஞ்சா கருப்பு பகிர்ந்து கொண்டனர். ஜூலி கெட்டப்பெண் கிடையாது. ஆனால் அவர் வேலை செய்யும் ஸ்டைல் சரியல்ல, நேர்மையானவர் அல்ல என்று நமீதா குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே வீட்டில் இருப்பவர்கள் தன்னை ஒதுக்கி பார்ப்பதாகவும், தான் சினிமாவை சார்ந்தவள் இல்லை என்பதால் தன்னை ஒதுக்குவதாக சினேகனிடம் கூறினார் ஜூலி. ஆனால் அன்று இரவே பிக்பாஸ் குடும்பம் ஜூலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரை வியப்பில் ஆழ்த்தியது. இப்படி ஜூலியை வைத்து ஒவ்வொரு நாளும் புதுபுதுசா கிளப்பி நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்கின்றனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.