தமிழகத்தில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது – திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு
திருப்பூர்: தமிழகத்தில் தற்போது நிர்வாகம் சீர்கெட்டு நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாநகர, வடக்கு மாவட்ட திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், "தென் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சேது சமுத்திர திட்டத்தை அதிமுக தலைமையிலான தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது.
சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் கனவு திட்டம். திமுக தலைவர் கலைஞர் தொடங்கி வைத்த இந்த திட்டம் ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டம் வருவது மூலமாக தென்னகத்து மக்களுக்கு வருமானம் உயரும். தொழில் வளரும்.
புதிய புதிய தொழிற்சாலைகளை உருவாக்கலாம். போக்குவரத்து செலவு குறையும். எனவே அதற்கு மத்திய அரசு உடனடியாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்கை முரண்பாடு இருந்தாலும், காங்கிரஸ், அண்ணா, கலைஞர் ஆட்சி காலங்களில் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை அவர்கள் முடக்கி வைத்தது இல்லை. மாதம் ஒரு ரூபாய் வீதம் 60 மாதங்கள் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, 60 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது எப்படி என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நிர்வாகம் சீர்கெட்டு நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது" என்றார்.