அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்த வழக்கு.. வாபஸ் பெற்ற கே.சி.பழனிச்சாமி
சசிகலா தரப்பில், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்க்கும் மனுவை வாபஸ் பெறுவதாக கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி வாபஸ் பெற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: அதிமுகவின் சட்ட விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கட்சியின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் சேர்ந்துதான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய முடியும்.
ஆனால், கட்சியின் பொதுக்குழு கூடி வி.கே.சசிகலாவை, தாற்காலிக பொதுச் செயலாளராக நியமித்தது. அவ்வாறு பொதுக்குழுவால் பொதுச் செயலாளரை நியமிக்க முடியாது. இது, கட்சியின் துணை விதிகளுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானதாகும்.
ஆகையால், கட்சியின் தேர்தலை நடத்த சுதந்திரமான அதிகாரியை நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளராக சுயமான நியமனம் செய்து கொண்ட எவரும், எந்த முடிவுகள் எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இது சம்பந்தமாக, ஜனவரி 20ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆகையால், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதிவிக்கான தேர்தல் நடத்துவதற்கு தனி அதிகாரி ஒருவரை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில், தாங்கள் ஏற்கனவே இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உட்கட்சி விவகாரத்தை ஏன் நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறீர்கள் என நீதிபதி கடிந்து கொண்டார். தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை வாபஸ் பெறுவதாக கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.