இபிஎஸ் கோஷ்டியை வேறு யாரோ இயக்குகிறார்கள்…‘நமது எம்ஜிஆர்’ செய்தியால் உடைந்தது பேச்சுவார்த்தை!
எடப்பாடி பழனிச்சாமியின் அணியை யாரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் அணியை யாரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பேச்சுவார்த்தையில்தான் கருத்துக்களை பரிமாற வேண்டும். அதுதான் தார்மீகமான நிலைப்பாடாக இருக்கும். பேச்சுவார்த்தை என்று வந்துவிட்டால் நமக்குள்ள உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி கட்டுப்படுத்திக் கொண்டால்தான் பேச்சுவார்த்தைக்கான சூழலே உருவாகும்.
குழப்பம்
இந்த சூழலில், ஒரு சில தலைவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேசுகிறார்கள். இதனால் இவர்களுக்குள் குழப்பிக் கொள்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். இவர்களை வேறு யாரோ இயக்குறார்கள். இவர்களால் எப்படி முறையாக சுயமாக எப்படி கருத்துக்களை வெளியிட முடியும்?
பின்னணியில் யாரோ..
அவர்களை வெளியில் இருந்து யார் இயக்குகிறார்களோ, அவர்கள் சொல்வதைக் கேட்டு தான் செயல்படுகிறார்கள் என்று நாங்கள் உணர்கிறோம். எனவே, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, எங்களிடம் 2 கோரிக்கைகள் மட்டும்தான் இருக்கின்றன.
நிபந்தனைகள்
ஒன்று ஜெயலலிதாவின் மரண விசாரணை மற்றொன்று சசிகலாவின் குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் மட்டும்தான் எங்களுடையது. வேறு எந்த நிபந்தனையும் கிடையாது. இதற்கு சரி என்றால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.
நமது எம்ஜிஆர்
இன்று ‘நமது எம்ஜிஆர்' பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் "அம்மா வகுத்த வழியில் கழகத்தையும் ஆட்சியையும் காப்பாற்றிடுவோம். சின்னம்மாவின் தோளோடு தோள் நின்று காத்திடுவோம்" என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது எங்கிருந்தோ வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் கே.பி. முனுசாமி.