தண்ணீரு தண்ணீருன்னு கேட்டா.. பன்னீரு பன்னீருன்னு சொல்லுது விவஸ்த கெட்ட பாஜக.. வீரமணி காட்டம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காத பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசினார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
போராட்டம்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், திமுக சார்பில் ஆர். எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார்கள்.
துரோகம்
இந்தப் போராட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது: உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தத் உத்தரவையும் புறந்தள்ளி மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது.
தண்ணீர் தண்ணீர்
தமிழகத்திற்கு தண்ணீர் தண்ணீர் என்று கேட்டால் பன்னீர் பன்னீர் அங்கே போங்கள் என்று சொல்லக் கூடிய விவஸ்தை கெட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தமிழகத்திற்கும் விவசாயிகளுக்கும் பாஜக துரோகம் செய்து வருகிறது.
திருப்பம்
இது வேடிக்கைக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வம்மு செய்வதற்காகவும் அல்ல. நாட்டின் மானத்தை, உரிமையை காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் போராட்டம். இது முடிவல்ல. தொடக்கம். நல்ல புரட்சிகரமான தொடக்கம். சரித்திரத்தில் திருப்பம் இருக்கக் கூடிய தொடக்கம் என்று வீரமணி கூறினார்.