அதிமுக கட்சிக்கும் தலைமைக்கும் என்றும் விசுவாசியாக இருப்பேன் - செங்கோட்டையன்
கட்சியில் புதிய பொறுப்புகளை கோருவதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று செங்கோட்டையன் கூறினார்.
சென்னை: தன்னைப் பற்றி வீண் வதந்திகளையும் பொய் பிரச்சாரங்களையும் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து தமக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. கட்சியில் செங்கோட்டையன் புதிய பொறுப்புகளை கோருவதாகவும் தகவல்கள் வெளியாயின. அதற்கு மறுப்பு தெரிவித்து செங்கோட்டையன் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் புதிய பொறுப்புகளை கோருவதாக வெளியான தகவல்கள் தவறானவை. அதிமுக தொண்டனாக பணியாற்றி வரும் என்னை குறிவைத்தும், குழப்பத்தை உருவாக்க நினைத்தும், சில தீய சக்திகள் உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்திற்கு உறுதுணையாக என்றென்றும் என் உயிர் மூச்சு உள்ளவரை இருப்பேன்.
என்றும் கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசியாக இருப்பேன். என் மீது இனி வீண் வதந்திகளையும், பொய் பிரச்சாரங்களையும் பத்திரிக்கைகளிலும், வலைதளங்களிலும் பரப்புவோர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் அறிக்கையில் கூறியுள்ளார்.