வாவ்.. காலா வசனம் கேட்டியா கண்ணா.. ச்சும்மா பிச்சு உதறது பாரு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா கரிகாலன் படத்தின் பஞ்ச் வசனங்கள் என்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவவிடப்படுகின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை.
கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 164-ஆவது காலா கரிகாலன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. மும்பையில் 11 நாள்கள் சூட்டிங் நடந்த நிலையில், தற்போது சென்னை திரும்பினார் ரஜினி.
மும்பை தாராவியை போல் பூந்தமல்லி சாலையில் அரங்குகள் அமைக்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் காலா படத்தின் ஆரம்ப காட்சியில் ரஜினி பேசும் பஞ்ச் வசனமும் லீக் ஆகியுள்ளது. அதில், "நான் கால் வைக்கிறதும் வைக்காததும் உன் தலையை எடுக்கறதும் எடுக்காததும் உன்கிட்டதான் இருக்கு!" என ரஜினி தனக்கே உரிய குரலில் பேசுகிறார்.
இதனால் காலா டீம் அதிர்ச்சி அடைந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு வசனம் என்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் "ஆரம்பத்துல அப்பாவியா இருக்க நான் ஒன்னும் மாணிக்கமும் இல்லை. வேதவல்லிய தேடி போற கபாலியும் நான் இல்ல.
பத்து பேர் நிக்கிற சண்டையில் 2 பேர் கையை ஒடச்சி, 3 பேரின் கால ஒடச்சி, மிச்ச இருக்கிற 5 பேர் என்னுடைய கால புடிச்சி கண்ணீர் விட்டு கதறவிடுறானே அந்த காலாடா! காலன் கரிகாலன்"!! என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து படக் குழுவினர் வெளியிட்டால் மட்டுமே தெரியும். இல்லையெனில் படம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.