கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி கைது - நிபந்தனை ஜாமீனில் விடுதலை
கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கிய திவ்யாபாரதி மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது.
மதுரை: சமூக செயற்பாட்டாளரும், கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கியவருமான திவ்யாபாரதி மதுரையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
சமூக-அரசியல் சூழலில் மலக்குழிக்குள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் கதைகளைத் தேடி ஆவணமாக்கியவர் திவ்யா பாரதி.
சமூக செயற்பாடாளர் திவ்யாபாரதிக்கு பெரியார் சாக்ரடீஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டதாக திவ்யாபாரதி மீது புகார் உள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார் திவ்யாபாரதி. கைது செய்யப்பட்ட திவ்யபாரதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தலித் மாணவர் விடுதியில் பாம்பு கடித்து இறந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து மதுரை மருத்துவமனையில் போராடினார் திவ்யா பாரதி. அந்த வழக்கில் நீண்ட நாட்கள் ஆஜராகாமல் இருந்த திவ்யபாரதி இன்று மதுரையில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
மாணவி வளர்மதி கைது, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் எழுதியவர் கைது செய்யப்பட்ட நிலையில் திவ்யாபாரதியின் கைதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா பாரதி, சமூக செயற்பாட்டாளருக்கு இதுபோன்று நடப்பது சகஜம்தான் என்று கூறியுள்ளார் திவ்யா பாரதி.
அதே நீதிமன்றத்தில் அவருக்கான ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு திவ்யபாரதிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஒருவாரம் மாவட்ட நீதிமன்றத்தில் திவ்யபாரதி தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.