நினைவிடத்தில் கலாமுக்கு சிலை வைப்பதில் குடும்பத்தார் அதிருப்தி!
ராமேஸ்வரம்: சிலைகள் அமைக்க பணத்தை செலவு செய்வது என்பது மிகப் பெரிய குற்றம் என கருதியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அப்படி இருக்கும்போது அவருக்கு சிலை வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது கலாம் குடும்பத்தினருக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம்.
ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு நினைவிடம் அமைக்க வரும் 27ம் தேதி அடிக்கல் நாட்டும் பணி நடக்க உள்ளது. அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலாம் நினைவிடம் அமைக்கும் பணி ஏற்கனவே ஓராண்டு தள்ளிப் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் அடிக்கல் நாட்டும் பணி நடக்கிறது.
சிலை
பேய்கரும்பு பகுதியில் கலாமுக்கு 7 அடி உயர வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. சிலை அமைக்கும் பணியில் டிஆர்டிஓ தீவிரமாக உள்ளது.
கலாம்
பணம் செலவு செய்து சிலைகள் வைப்பது மிகப் பெரிய குற்றம் என கருதியவர் கலாம் என அவருக்கு நெருக்கமான ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கலாம் மீது பலருக்கு வருத்தம் ஏற்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காந்தி சிலை
கலாமுக்கு நெருக்கமானவர் கூறுகையில், சிலைகளை திறந்து வைக்க மறுத்தவர் கலாம். 2013ம் ஆண்டு மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைக்குமாறு பெங்களூரை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் கலாமை கேட்க அவர் மறுத்துவிட்டார். சிலை வைக்க செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களின் மேம்பாட்டிற்கு செலவு செய்யுமாறு அறிவுறுத்தினார் என்றார்.
மோடி
2013ம் ஆண்டில் சர்தார் பட்டேலின் சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலாமை கேட்டுக் கொண்டார். ஆனால் கலாம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். மோடி மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் கலாம் அந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதன் பிறகு அவர்களுக்கு இடையேயான உறவு மாறிவிட்டது என்று கலாமுக்கு நெருக்கமானவர் தெரிவித்துள்ளார்.
கலாம் குடும்பத்தார்
கலாமுக்கு நினைவிடம் அமைக்கும் பணி தாமதமானது மற்றும் அவரின் சமாதியை பாதுகாக்க கூட அரசு சரியான நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றால் அவரது குடும்பத்தார் அதிருப்தியில் உள்ளனர். கலாமுக்கு சிலை அமைப்பதில் அவரது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி இல்லை. இருப்பினும் அமைதி காத்து வருகிறார்கள் என குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நினைவிடம்
கலாம் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.