மோடி, ராகுல் வருகை.. ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு.. விமானங்கள் ரோந்து
ராமேஸ்வரம்: பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தி போன்றோர் முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்க ராமேஸ்வரம் வருவதால், இலங்கை-இந்தியா நடுவேயான கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான கடலோர காவல் படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதிகளில் இந்திய கடல்படையின் ரோந்து படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன.
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதால், கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ராமேஸ்வரத்திற்குள் ஊடுருவி விட கூடாது என்பதற்காக இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
கடலில் அதிவேகமாக சீறியபடி பயணிக்க கூடிய 3 சிறப்பு ரோந்து வாகனங்களை கடலோர காவல்படை ராமேஸ்வரம் கடல் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகள், வான் வழியாகவும் கண்காணிக்கப்படுகின்றன. இதற்காக இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் படகு அல்லது கப்பல் நடமாட்டம் உள்ளனவா என்பதை அவை கண்காணிக்கும்.
பழைய எல்டிடிஇ உறுப்பினர்கள் சிலர் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதையும் கருத்தில் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.