‘நாதத்தை’ இழந்தது ஏவுகணை நாயகன் கலாமின் வீணை
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு வீணை வாசிக்கும் பழக்கம் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னிடம் உள்ள பழமையான வீணையை அவர் வாசிப்பது வழக்கம்.
'பாரத ரத்னா" விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நேற்று, மேகாலயா மாநிலத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து காலமானார். கலாமின் மரணத்திற்கு மத்திய அரசு 7 நாட்கள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது.
ஏவுகணை நாயகனாக திகழ்ந்தார், தன்னம்பிக்கை பேச்சுக்களுக்கு சொந்தக்காரர், கனவு காண ஊக்குவித்தார் என அப்துல் கலாம் குறித்து பேச நிறைய விசயங்கள் இருக்கின்றன.
இசை மீது தீராக்காதல்...
நாட்டுக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்த மக்கள் ஜனாதிபதிக்கு இசை மீதும் தீராக் காதல் இருந்தது. ஆம், அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அந்த வீணையை வாசிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.
தியாகராஜ கீர்த்தனைகள்...
மிகுந்த இசை ஞானம் பெற்றிருந்த கலாமுக்கு, தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகள் கூட தெரியும்.
ராஷ்ட்ரபதி பவனில் இசை நிகழ்ச்சிகள்...
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ராஷ்ட்ரபதி பவனின் மொகல் தோட்டத்தில் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் அவர் ஏற்பாடு செய்து நடத்தினார். இந்துஸ்தானி, கர்நாடக இசை, வில்லுப்பாட்டு என பல வகையான இசைக் கலைஞர்களை ஜனாதிபதிமாளிகையில் இசையமைக்க வைத்து அவர்களை கெளரவித்தார் கலாம்.
டிரம்ஸ் வாசித்த கலாம்...
ஒருமுறை டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சிவமணியின் டிரம்ஸ் இசையை ரசித்துக் கொண்டிருந்த கலாம், திடீரென மேடையேறினார். சிவமணியிடம் டிரம்ஸ்வாசிப்பது குறித்து கேட்டறிந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தானும் வாசித்துக் காட்டி பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பாராட்டு...
கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி கலாமை பாராட்டிய நிலையில், சிவமணியிடம் சில நிமிடங்கள் தனியேபேசி அவரை பாராட்டி விட்டு கீழே இறங்கினார் கலாம்.
தோட்டக்கலை...
இசையைப் போலவே, தோட்டக்கலையிலும் ஆர்வம் காட்டியவர் கலாம். வழக்கமாக ஜனாதிபதி மாளிகை பொது மக்களுக்காக திறக்கப்படாது. ஆனால், அதை பள்ளிக் குழந்தைகளுக்காக திறந்துவிட்டவர் கலாம்.
மூலிகைத் தோட்டம்...
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ராஷ்ட்ரபதி பவனில் தான் உருவாக்கியுள்ள மூலிகைத் தோட்டத்தை குழந்தைகளுக்குச் சுற்றிக் காட்டுவதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு பணியாகவே செய்து வந்துள்ளார் கலாம்.