கலாமின் கடைசி புத்தகம் “கடந்த நிலை” - காலம் கடந்து காற்றில் கலந்த மனிதர்!
சென்னை: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்களின் கடைசி புத்தகமான "கடந்த நிலை" நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று மாலை மேகாலயாவில் அவருடைய உயிர் காலம் கடந்து காற்றில் கலந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் தனது ஆன்மீக அனுபவங்கள் தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து "ட்ரான்செடன்ஸ்" என்னும் நூலினை எழுதியுள்ளார். இந்த நூலை பிரதமர் மோடி கடந்த மாதம் டெல்லியில் வெளியிட்டார்.
டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் தனக்கும் குரு பிரமுக் சுவாமிக்கும் இடையே ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து அப்துல் கலாம் இந்த நூலினை எழுதியுள்ளார். தமிழில் இந்த நூல் "கடந்த நிலை" என்ற பெயரில் வெளியானது. நூல் குறித்த சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று முன் தினம் நடந்தது. அப்துல் கலாம் எழுதிய அந்த புத்தகம் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு முஸ்லிமாக பிறந்து, இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கைகள் பற்றிய தன்னுடைய உள்ளார்ந்த கருத்துக்களை இந்நூலில் வெளியிட்டு சமய நல்லிணக்கத்திற்கு கடைசியாக வித்திட்டுச் சென்றுள்ள காலம் கடந்த அப்துல் கலாம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.