எல்லோரது மனதிலும் கலாம் மட்டுமே.. பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் மக்கள்
சென்னை: இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக சோகமாகியுள்ள இந்த காட்சி இதற்கு முன்பு வெகு அரிதாக நடந்த ஒன்று. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அப்துல் கலாமின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக நீண்ட காலத்தி்ற்குப் பின்னர் ஒரு முன்னாள் குடியரசுத் தலைவருக்காக கண்ணீர் வடித்து நிற்கிறது. எல்லாவற்றையும் மறந்து விட்டு, கலாமை மட்டுமே மனதில் சுமந்து கடந்த 3 நாட்களாக மக்கள் காட்சி அளிக்கிறார்கள். தங்கள் மனம் கவர்ந்த கலாமுக்கு இறுதி விடையளிக்க ஒட்டுமொத்த தேசமும் தயாராகி வருகிறது.
காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோரது மறைவுக்குப் பின்னர் இப்போதுதான் ஒட்டுமொத்த தேசமும் ஒரு தலைவரின் மறைவுக்காக துயருற்று நிற்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கெங்கும் கலாம் குறித்த பேச்சுக்கள்தான்.
கலாமின் ஒவ்வொரு சாதனையையும், அவர் பேசிய பேச்சுக்களையும், அவர் கூறிய அறிவுரைகளையும் ஒவ்வொருவரும் நினைத்து நினைத்து கண்ணீர் வடித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரின் பெருமைகளை ஷேர் செய்து வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில்
சமூக வலைதளங்களில் கலாமுக்கு உடல் நலக்குறைவு என்று செய்தி வந்தது முதலே அப்துல் கலாம் குறித்த செய்திகள், பகிர்வுகள்தான் முதலிடம் பிடித்துள்ளன.
கலாமின் பெருமைகள், சாதனைகள்
அப்துல் கலாமின் பெருமைகள், அவரது சாதனைகள்,. அவரது எளிமை உள்ளிட்டவை குறித்த செய்திகள், புள்ளிவிவரங்களை மக்கள் சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
புரபைல் படங்கள் மாற்றம்
பலர் தங்களது புரபைல் மற்றும் கவர் படங்களில் அப்துல் கலாமை போட்டு வைத்துள்ளனர். பலர் துக்கத்தை வெளிப்படுத்தும் கருப்பு நிறத்தை புரபைல் படமாக வைத்துள்ளனர்.
பொது இடங்களில், வீடுகளில்
பொது இடங்களிலும் எங்கு பார்த்தாலும் கலாம் குறித்த பேச்சாகவே இருக்கிறது. கலாமைப் போல ஒரு தலைவர் இனி நமக்குக் கிடைப்பாரா என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் வெளியிடப்படுகிறது.
அப்பழுக்கற்ற மனிதர்
அரசியல்வாதிகள், இளைஞர்கள், மாணவர்கள் என அத்தனை பேரும் கலாமைப் பின்பற்றி நடந்தாலே போதும் இந்தியா கலாம் கனவு கண்டதைப் போல 2020ம் ஆண்டில் வல்லரசாக மாறி விடும் என்றும் மக்கள் பேசுகிறார்கள்.
பள்ளிகளில் கண்ணீர் அஞ்சலி
பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் கண்ணீர் அஞ்சலி செலுத்துவது தொடர்ந்து வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மாணவ, மாணவியர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொது இடங்களில் புகைப்படம் வைத்து
பல பொது இடங்களில் அப்துல் கலாம் புகைப்படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்துவதையும் காண முடிந்தது. அனைவரிடத்திலும் கலாம் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது மலைக்க வைக்கிறது. வியக்க வைக்கிறது.
ஒட்டுமொத்த தேசமும் அழுகிறது
நேருவுக்குத்தான் ஒட்டுமொத்த தேசமும் அழுதது, நேரு மீதுதான் ஒட்டுமொத்த தேசமும் அன்பு வைத்திருந்தது என்பார்கள். ஆனால் கலாம் இன்று அனைவரையும் மிஞ்சி விட்டார்.
எல்லாவற்றையும் மறந்த மக்கள்
விடிய விடிய சினிமா பற்றியும், புதிய படங்களைப் பற்றியும் பேசிப் பேசி மாய்ந்த மக்கள் கடந்த 3 நாட்களாக எல்லாவற்றையும் மறந்து விட்டு கலாம் குறித்து மட்டுமே பேசியும், யோசித்தும், கருத்துக்களைப் பகிர்ந்தும் வருவது உண்மையிலேயே வியப்பாக உள்ளது.
கலாம் காட்டிய பாதையில் நடந்தால்
இதேபோல வெட்டித்தனமான விஷயங்களுக்காக மெனக்கிடுவதை விட்டு விட்டு கலாம் காட்டிய பாதையில் நடந்து, உழைப்புக்கும், திறமைக்கும், ஊழலற்ற நிர்வாகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டாலே போதும், கலாம் கண்ட கனவு நனவாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.