நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய கலாம் பிறந்தநாள் விழா
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட சார்பில் பாளையங்கோட்டையில் இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடந்தது. இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.
நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மானூர் யூனியன் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூர் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் தலைமையில் மாவட்ட கலெக்டர் கருணாகரன் மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து பள்ளி வளாகம், முக்கூடல் சாலை ஓரங்களில் சுமார் 10 ஆயிரம் மரங்கள் நடப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மரக்கன்று வழங்கும் விழாவும், 1000 மரக்கன்றுகளை மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் வழங்கும் விழாவும் நடைப்பெற்றது.
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் அப்துல் கலாம் பெயரை வடிவமைத்து இருந்தனர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்வும் தொடக்கி வைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மரம் நடும்விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.