பெண் எழுத்தாளருடன் ஒரே மேடையில் அமர மறுத்த சாமியார்?, கலாம் புத்தக வெளியீடு தள்ளிப்போனது
திருச்சூர்: பெண்ணின் அருகில் ஒரே மேடையில் அமர சாமியார் பிரமாவிகாரி தாஸ் மறுத்ததால் கலாம் குறித்த புத்தகத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்த பெண் எழுத்தாளருக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், புத்தக வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கடைசி நூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யும் வேலையை ஸ்ரீதேவி எஸ்.கர்தா என்ற பெண் எழுத்தாளர் செய்திருந்தார். அப்புத்தகம் திருச்சூரிலுள்ள கேரள சாகித்ய அகாடமி அரங்கில் இன்று வெளியிடப்படுவதாக இறுந்தது. சுவாமி பிரமாவிகாரி தாஸ் இதற்கு தலைமையேற்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஸ்ரீதேவிக்கு விழாவில் பங்கேற்க புத்தக வெளியீட்டாளர்கள் அனுமதி மறுத்துவிட்டனராம். இதற்கு, சாமியார் தன்னுடன் ஒரு பெண் மேடையில் அமர கூடாது என்று கூறியதே காரணம் என்று ஸ்ரீதேவி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதைகேள்விப்பட்ட பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விழா நடைபெறவிருந்த இடத்தில் போராட்டங்கள் நடத்தினர். இதையறிந்த பிரமாவிகாரி தாஸ் விழாவுக்கு வராமல் தவிர்த்துவிட்டார். இதனால் புத்தக வெளியீட்டு விழா தள்ளிப்போயுள்ளது. ஆனால், சுவாமி எதுவும் கூறவில்லை என்றும், புத்தக வெளியீட்டுக்கு மொழியாக்கம் செய்வோரை அழைப்பது தங்கள் பழக்கம் இல்லை என்றும் புத்தக வெளியீட்டு நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. ஆயினும் சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சி விமர்சிக்கப்பட்டுவருகிறது.