தொடர்ந்து அப்துல் கலாமை புறக்கணிக்கும் ஜெ.... நினைவு நாளுக்கும் ராமேஸ்வரம் போகவில்லை!
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாண்டு நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அப்துல் கலாம் பிறந்த மண்ணின் முதல்வரான ஜெயலலிதாவோ இந்த நினைவுநாள் நிகழ்வு எதிலுமே கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி காலமானார். அவரது உடல் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மதுரை வழியாக ராமேஸ்வரம் பேய்க்கரும்பு நினைவிடத்துக்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
கலாமின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் இந்த தேசமே பெருந்திரளாக கலந்து கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, 6 மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்ல்து கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழகத்தின் தென்கோடியான ராமேஸ்வரத்துக்கு நேரில் வருகை தந்தனர்.
உடல்நலம் சரியில்லை என அறிக்கை
ஆனால் தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதாவோ, தமக்கு உடல்நிலை சரியில்லை; ஆகையால் கலந்து கொள்ளவில்லை என ஒரு அறிக்கை விட்டு ராமேஸ்வரம் செல்லவில்லை. இது அப்போதே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மவுனம் காக்கும் ஜெ.
இந்த நிலையில் அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி சிலையை திறந்து வைத்துள்ளனர். ஆனால் இந்த முறையும் ராமேஸ்வரத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா செல்லவில்லை. இதுபற்றி எந்த ஒரு அறிக்கையும்கூட வெளியிடவில்லை
கடும் ஏமாற்றம், வேதனை
தமிழக அமைச்சர்கள் நிலோபர், மணிகண்டன் மற்றும் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா ஆகியோர் மட்டுமே முதலாம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்டனர். அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் சரி.. அதன் பின்னர் தற்போது வரை நாள்தோறும் பலரையும் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துதான் வருகின்றார். ஆனால் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுநாளுக்கு கூட முதல்வர் ஜெயலலிதா ராமேஸ்வரம் செல்லாதது என்பது பொதுவாக பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தென்மாவட்டத்தில் அதிருப்தி
குறிப்பாக தங்களது மண்ணின் மைந்தர் அப்துல் கலாமை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து புறக்கணித்து வருவது தென்மாவட்ட மக்களிடத்தில் கடும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம்.