‘கனவு நாயகன்’ கலாமின் நிறைவேறாத ஆசை!
சென்னை: பாம்பன் பாலத்தில் சோலார் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்பது மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆசைகளுள் ஒன்று. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதைக் காண வாய்ப்பில்லாமல் அவர் மறைந்து விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால், 'மக்கள் ஜனாதிபதி' என அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம். இவர் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.
இளைய தலைமுறையினரை கனவு காணுங்கள் என ஊக்கப் படுத்திய கலாமிற்கும் சில கனவுகள் இருந்தது. இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கனவைப் போலவே, ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தில் சோலார் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் அவர் ஆசைப் பட்டார்.
இதற்கான பணிகளை, அவரது ‘கலாம் ஆப் மிஷன்' குழுவினர் ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால், அது முழுமையடையும் முன்னரே கலாம் மறைந்து விட்டார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த அப்துல்கலாமின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பது குறிப்பிடத்தக்கது.