ராட்டையையும், மாட்டையும் முன்னிறுத்திய போராட்டம் வென்றே தீரும்.. கமல் உற்சாகம்
சென்னை: அறவழியில் நடைபெறும் இளைஞர் போராட்டம் நிச்சயம் வெல்லும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என வலியுறுத்து தமிழகம் முழுவதும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது.சென்னை மெரீனா கடற்கரையில் முதல் 3 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில் இன்று 4-வது நாளில் வணிகர்கள், அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத்தினர், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
லட்சம் பேர் திரண்டதால் மெரீனா கடற்கரையே குலுங்கியது. எங்கு திரும்பினாலும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற ஒரே கோஷம் மட்டுமே விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. கடற்கரை மணல்வெளி கடலில் இருந்து சாலைவரை எங்கெங்கு நோக்கினும் போராட்டத்தின் எழுச்சி காணப்பட்டது. வாடிவாசல் திறந்தால்தான் வீட்டு வாசலுக்கு செல்வது என்ற உறுதியுடன் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2017
இந்தநிலையில் இளைஞர்களின் அறப்போராட்டம் நிச்சயம் வெல்லும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.