தமிழக அரசும், கேரள அரசும் ஓராண்டு நிறைவு செய்தது... ஆனால் கேரளத்துக்கு மட்டும் நடிகர் கமல் வாழ்த்து
தமிழக அரசும், கேரள அரசும் ஓராண்டு நிறைவு செய்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள அரசுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசும், கேரள அரசும் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள அரசுக்கு மட்டும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக அரசு மே 23-ஆம் தேதி பொறுப்பேற்றது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு அடைந்தது.
அதேபோல் பினராயி விஜயன் தலைமையில் கேரள அரசும் கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில் இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வாழ்த்து சொல்லாமல் கேரள அரசுக்கும் மட்டும் வாழ்த்து கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில்...
ஜல்லிக்கட்டு விவகாரத்திலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இளைஞர்களுக்கு அனைவரும் நெடுவாசல் சென்று போராட வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுத்தார்.
விருப்பும், வெறுப்பும்
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த கமல், அரசியல்வாதிகள் மீது விருப்பும், வெறுப்பும் ஒரு சேர மக்களிடையே உருவாகி உள்ளது. இதை, வீதியில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இது, அச்சம் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
எந்த கட்சிக்கும் ஆதரவில்லை
நான் அரசியலற்றவனாக இருக்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என் கசப்புணர்வை, நான் எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். இப்போது, ஊழல் வழக்கில் சசிகலா மட்டுமல்ல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கூட குற்றவாளி தான் என, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபட தெரிவித்துஉள்ளது. சசிகலா கும்பலால், முதல்வராக நியமிக்கப்பட்டவர் தான், இந்த பழனிசாமி. சட்டசபையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக பரிசோதிக்க கூடாது.
தேர்தல் நடத்த வேண்டும்
மீண்டும் தேர்தல் வைத்தால், மக்கள் தங்கள் மனதில் உள்ளதை, உணர்த்துவர். மறு தேர்தல் என்பது செலவு வைக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால், என்ன செய்ய? தரையில் பாலை கொட்டி விட்டோம். அதை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
கமல் நன்றிக் கெட்டவர்
இதனால் வெகுண்டெழுந்த எடப்பாடி, 65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரிந்தவர் ஜெயலலிதா. அந்த நன்றியை மறந்து பேசுகிறார். ஆட்சி தொடரக் கூடாது, பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் கமல் என்று எடப்பாடி கண்டனம் தெரிவித்தார்.
மகாபாரதம் குறித்து...
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
என்னதான் இருந்தாலும்...
தமிழக அரசும் கேரள அரசும் ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில் கேரள அரசுக்கும் மட்டும் மின்னஞ்சல் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதோடு அனைத்து துறைகளிலும் முன்மாதிரி மாநிலமாக கேரளம் திகழ வேண்டும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்னதான் தமிழக அரசு மீது கமலுக்கு அதிருப்தியிருந்தாலும் வாழ்த்து சொல்லாமல் இருந்தது தவறு என்கின்றனர் நடுநிலைவாதிகள். சொல்லியிருந்தால் இரு அரசுகளுக்கும் சொல்லியிருக்க வேண்டு்ம. இல்லையெனில் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும் . தமிழகத்தில் இருந்து கொண்டு மற்றொரு மாநிலத்தை புகழ்வது அழகா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.