முரசொலி பவள விழாவில் ஒன்றாக பங்கேற்ற ரஜினி, கமல்.. அரசியல் முன்னோட்டம்?
சென்னை: நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் முரசொலி பவளவிழாவில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.
முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
இருவருமே மேடையின் முன்வரிசை இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தனர். அவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அருகருகே
ரஜினிகாந்த் மட்டுமின்றி, கமலும் அரசியலுக்கு வர உள்ளதாக சமீபகாலமாக பேச்சு உள்ளது. இந்த சூழலில் இருவரும் ஒரே விழாவில் பங்கேற்றது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. விழா தொடங்கிய சிறிது நேரம் கழித்து, கமல் விழா மேடையில் அமர வைக்கப்பட்டார். ரஜினி ஏற்கனவே தனது பெயரை விழா பத்திரிகையில் போட வேண்டாம் என கூறியிருந்தார். எனவே அவர் தொடர்ந்து விழா மேடையின் முன்பு, முதல் வரிசையில்தான் அமர்ந்திருந்தார்.
திமுக விழா
அதிமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் கமல்ஹாசன், திமுக நடத்தும் விழாவில் பங்கேற்றுள்ளதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த்தை பொறுத்தளவில் அதிமுகவுக்கு எதிராக கருத்து கூறுவதை தவிர்த்து வருவது கவனிக்கத்தக்கது.
ரசிகர்கள் படை
ரஜினி மற்றும் கமல் இருவருமே நீண்டகாலமாக திரையுலகில் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். நண்பர்கள். இவ்விருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் விழாவுக்கு கொண்டு வந்து சேர்த்ததில் திமுகவின் சாதுர்யமும் உள்ளது.
அரசியல் முக்கியத்துவம்
தமிழக அரசின் மந்த செயல்பாடுகள், ஆளும் கட்சிக்குள் தினமும் வெடிக்கும் கோஷ்டி பூசல்களால் கோபத்திலுள்ள மக்களின் பார்வையை திமுக பக்கம் திருப்ப ரஜினி, கமல் ஆகிய இரு ஆளுமைகளின் கனிவு திமுகவுக்கு தேவைப்படும் என்பது பொதுநோக்கர்கள் கருத்தாக உள்ளது. எனவே முரசொலி விழா, பத்திரிகையின் பவள விழா என்பதை தாண்டி அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவத்தை ஈட்டியுள்ளது.