"விளி" கேட்கும்.. அரசியலுக்கு வருகிறாரா கமல்?.. ராத்திரியில் பரபரப்பூட்டிய திடீர் டிவீட்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டால் சமூகவலைதளப் பக்கங்களில் பெரும் விவாதப் பொருளாக அமைந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.
அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அரசியலுக்கு வந்து விட்டு ஊழல் பற்றி பேச வேண்டும் என்கிறார் அமைச்சர் ஒருவர் எங்களை விமர்சிக்க கமலுக்கு தகுதியில்லை என்று மற்றொரு அமைச்சர் பேசுகிறார். கமல்ஹாசனின் கருத்துக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று திடீரென தமது டிவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில், அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2017
மற்றொரு டிவிட்டர் பதிவில்,
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழன் என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்
- இவ்வாறு பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.
புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி pic.twitter.com/yoFMD8jeJO
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2017