உட்கட்சி பிரச்சனையால் அதிமுக ஆட்சி தானாகவே கலைந்துவிடும்: கமல்ஹாசன் ஆரூடம்
அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையால் அந்த ஆட்சி தானாகவே கலைந்து விடும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக ஆட்சி அக்கட்சியில் நிலவி வரும் உள்கட்சி பூசலால் தானாக கவிழ்ந்து விடும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து தந்தி தொலைக்காட்சியில் கமல் அளித்த பேட்டி:
கேள்வி: உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு அரசு மீது புகார் சொல்கிறீர்கள். 5 ஆண்டு வரை அவர்களுக்கு ஆட்சியை கொடுத்திருக்கிறோம் அல்லவா?
பதில்: அதுவரை பட்டாக வேண்டுமா என்ன?. நான் அரசியல் சாசனத்தில் புது கருத்தை திணிக்க நினைக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
கேள்வி: ஒரு குற்றச்சாட்டு வைத்த உடனேயே ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று நாம் கூறுவது சரியா?.
பதில்: முடிந்தால் பண்ணுங்கள். முடியவில்லை என்பதற்கான எல்லா ஆதாரங்களும் வந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் சென்னை வருபவர்கள் பக்கிங்காம் கால்வாயையும், கூவத்தையும், அடையாறையும் பார்த்து கைக்குட்டையை மூக்கில் வைத்துக்கொள்வார்கள். இப்போது யாரும் அதை செய்வதே இல்லை. ஏனென்றால், பழகிப்போய்விட்டது. அதில் இருந்து மாறுவதற்கு யாராவது ஒருவர் சத்தம் போட வேண்டும்.
கேள்வி: இதற்கு என்ன தீர்வு?
பதில்: என்னுடைய இந்த வாதம், என்னுடைய இந்த கோபம், மக்களுடைய கொந்தளிப்பு, அதற்கு ஒரு பதிலை சட்ட வல்லுநர்களை வைத்து தேடிப்பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். மார்க்கண்டேய கட்ஜூ என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. அந்த அளவுக்குக்கூட நான் போகவில்லை. ஆனால், மாற்றம் வேண்டும் என்பதில் மாற்றமே கிடையாது.
கேள்வி: இந்த ஆட்சி தானாகவே கலைந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. அதற்கு கட்சியில் உள்ள உள்கட்சி பிரச்சினை காரணமா?.
பதில்: கண்டிப்பாக அது தான் காரணம். நான் பெரிய அரசியல் ஞானியாக இதை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.