ஜெ. வாழ்த்து தெரிவிக்காத ஆதங்கம்... 'மலையாளியாக' 'விஸ்வரூபம்' எடுத்த கமல்ஹாசன்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தமக்கு வாழ்த்து தெரிவிக்காத ஆதங்கத்தில்தான் தன்னை ஒரு மலையாளி என நடிகர் கமல்ஹாசன் பிரகடனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பின்னர் பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக தென்னிந்திய திரை உலகம் கமல்ஹாசனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.
அதே நேரத்தில் இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் உள்ளிட்டோர், கமலுக்கு மோடி, ஜெயலலிதா ஏன் பாராட்டு தெரிவிக்கவில்லை, அவருக்கு பரிசுத் தொகை அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஆனாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் பாராட்டும் வரவில்லை. இந்த நிலையில் அண்டை மாநிலத்து முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த வாழ்த்தால் நெகிழ்ந்து போயிருக்கிறார் கமல்ஹாசன்.
இதனது வெளிப்பாடாக, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர், என்னை யாரென்று மலையாள சினிமா ரசிகர்களிடம் கேளுங்கள் என பினராயி விஜயனுக்கு அனுப்பிய நன்றி கடிதத்தில் 'மலையாளியாக' விஸ்வரூபமெடுத்திருக்கிறார் கமல்ஹாசன் என்றே தெரிகிறது.
ஏற்கனவே விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டபோது, நாட்டைவிட்டே வெளியேறுவேன் என பிரகடனம் செய்தவர் கமல்ஹாசன்.. இப்போது மாநில முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை என்பதற்காக 'இனத்தையே' மாற்றிக் கொண்டு மலையாளியாகிவிட்டார் கமல்.