விரட்டும் இன்டர்போல்... துபாயிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினார் "டான்" ஸ்ரீதர்
கொலை, கொள்ளை, நில அபகரிப்பு ஆகிய தொழில்களில் கைதேர்ந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் மலேசியாவுக்கு தப்பி விட்டார்.
காஞ்சிபுரம்: கொலை, கொள்ளை, நில அபகரிப்பு ஆகிய தொழில்களில் வல்லவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் மலேசியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.
காஞ்சிபுரத்தில் உள்ள திருபருத்திகுன்றத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (46). சாராய தொழிலில் கொடி கட்டி பறந்தவர். இதுமட்டுமல்லாமல் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, சொத்துக்களை அபகரித்தல் ஆகிய தொழில்களும் இவருக்கு முக்கியமானவை.
இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே ஸ்ரீதர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
என்கவுன்ட்டருக்கு பயம்
போலீஸாரின் என்கவுன்ட்டருக்கு பயந்து துபாய்க்கு தப்பி சென்றார். அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, சொத்து அபகரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை கைது செய்ய போலீஸார் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.
சொத்துகள் முடக்கம்
ஸ்ரீதரின் மனைவி, மகள், தம்பி மற்றும் கூட்டாளிகள் பெயரில் வாங்கிய சொத்துகளை முடக்க வேண்டும் என காஞ்சிபுரம் போலீஸார், அமலாக்கத் துறைக்கு பரிந்துரைத்தனர். அதன்படி சென்னை மண்டல அமலாக்கத் துறை பரிந்துரைத்தது. அதன்படி சென்னை மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்ரீதரின் ரூ.160 கோடி சொத்துகளில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.
சப்-கலெக்டர் மகன் கொலை
எனினும் ஸ்ரீதர் துபாயில் இருந்தபடி தனது கூட்டாளிகள் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, சொத்து பறிப்பு ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் சப்- கலெக்டர் மகன் கொலை, அவரது சொத்துகள் பறிப்பு ஆகியவற்றிலும் ஸ்ரீதருக்கு தொடர்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
துபாய் போலீஸ் உதவி
ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஏடிஎஸ்பி ஸ்ரீநாத் தலைமையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, துபாய் போலீஸார் உதவியுடன் ஸ்ரீதரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனை, தனது கூட்டாளிகள் மூலம் அறிந்த ஸ்ரீதர், துபாயில் இருந்து மலேசியாவுக்கு தப்பிச் சென்று பதுங்கியிருப்பதாக காஞ்சிபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மலேசியாவுக்கு ஓட்டம்
மலேசியாவில் அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு உதவி செய்பவர்கள் யார் உள்ளிட்டவை குறித்து, தமிழக உள்துறை, மத்திய உள்துறை மூலம் சர்வதேச போலீஸாரின் உதவியை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரும் அமலாக்கத் துறையும் நாடி உள்ளனர். பல ஆண்டாக வெளிநாட்டில் இருந்தபடி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல தாதா ஸ்ரீதரை கைது செய்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் துப்பு துலங்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.