பசுமை நிறைந்த நினைவுகளே... எத்திராஜ் கல்லூரி முன்னாள் மாணவிகள் சந்திப்பில் கனிமொழி நெகிழ்ச்சி!
சென்னை: சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவிகளுக்கான சந்திப்பில் தழுதழுத்த குரலில் பழைய நினைவுகள் மனதில் அலை புரள உரையாற்றினார் அக்கல்லூரியின் முன்னாள் மாணவியான கவிஞர் கனிமொழி.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திக்கும் தினம் மற்றும் 1990 ஆம் ஆண்டு படித்த மாணவிகளின் வெள்ளிவிழா சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவிகள், பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
கல்லூரி பருவத்தில் நடைபெற்ற மறக்கமுடியாத பசுமையான நினைவுகளை மனதில் தாங்கிகொண்டு வந்து குவிந்திருந்தனர். முன்னதாகவே வந்தவர்கள் தங்களுடன் கல்லூரிகளில் படித்த தோழிகள் வருவார்களா என்று வழிமேல் விழி வைத்து எதிர்நோக்கியபடி காத்திருந்தனர்.
தங்கள் தோழிகள் வந்த உடன் தோள் சாய்ந்து, அன்போடு கட்டி அணைத்தப்படி உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். சிலர் ஆரத்தழுவி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தார்கள்.
பல்வேறு ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்தவர்கள் கண்ணீர்மல்க நலம் விசாரித்தது பிற மாணவிகளை உணர்ச்சிப்பெருக்கெடுக்க வைத்தது. முன்னாள் மாணவிகள் தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு மரியாதை நிமித்தமாக குரு வணக்கம் செலுத்தினார்கள்.
கல்லூரியின் கலை அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் சேர்மன் முரளிதரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் நிர்மலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மணிமேகலை வந்திருந்தவர்களை வரவேற்றார்.
ஊடக பொறுப்பாளரும், தமிழ்த்துறை உதவி பேராசிரியருமான விஜயலட்சுமி மணிகண்டன், 1954-57 ஆம் ஆண்டு படித்த மூத்த மாணவிகளான சரோஜா, பிரமிளா சிவக்குமார் பங்கேற்றனர்.
கல்லூரியின் முன்னாள் மாணவிகளும், பிரபலங்களுமான கனிமொழி எம்.பி., பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி நினைவுகளை முன்னாள் மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது அவர், "கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களுடன் படித்த மாணவிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தங்களுடன் படித்த மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் அனைவரையும் பார்க்க முடியும் என்பதால் மகிழ்ச்சியை தருகிறது.
மலரும் நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும். கல்லூரியில் படித்து முடித்து வெளியே வந்து ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் சமூக ஊடகங்கள், செல்போன் மற்றும் "வாட்ஸ் அப்" உள்ளிட்டவற்றால் தொடர்ந்து நட்பினை பகிர்ந்துகொண்டேதான் இருக்கிறோம்.
கல்லூரியில் படித்தபோது நிகழ்ந்த அழகான மற்றும் மறக்கமுடியாத நினைவுகளை தற்போது திரும்பிப்பார்க்கிறோம். கல்லூரியில் பயின்ற காலத்தில் படித்த பாடங்கள் நினைவுக்கு வருவதில்லை.
ஆனால் கல்லூரி பருவத்தில் செய்த குறும்புத்தனங்கள் மட்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பெண் என்பவள் சவால்களையும், தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இதனை தகர்த்தெறிந்து சாதனை படைக்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.