முதல்ல உட்கார 'சேர்' கொடுங்க.. அப்புறம் சவால் விடுங்க.. ஜெ. மீது பாயும் கனிமொழி !
சென்னை: சட்டசபைக்குள் வந்து அமரும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்குப் போதுமான வசதி செய்து கொடுக்காமல், சவால் விடுவதில் அர்த்தமில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். வண்டி செல்வதற்கு கூட வழி செய்து தர ஆளும்கட்சியினருக்கு மனமில்லை என்றும் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கையில் பேசிய ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டியதுதானே என்று கேட்டார். அவரது பேச்சு அதிர்வலைகளை உருவாக்கியது.
தி.மு.க மகளிர் அணி செயலாளரும், ராஜ்யசபா தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் மகளிருக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்கள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அண்ணா அறிவாலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழகம் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
பல வழக்குகளுக்கு இன்று வரை எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. ராமஜெயம் கொலை வழக்கில் 6 ஆண்டுகள் ஆகியும் இது வரை குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
காவல்துறை மானிய கோரிக்கையின்போது தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்குள் இருக்கக் கூடாது என்பதற்காகதான், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க. உறுப்பினர்களை சட்டசபைக்குள் வைத்துக் கொண்டு விமர்சனம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், எல்லோரையும் வெளியேற்றிவிட்டு விமர்சனம் செய்வதால் என்ன பயன்? மு.க.ஸ்டாலினை சட்டசபையில் வைத்து கொண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்கு அ.தி.மு.க. அரசுக்குத் தைரியம் இல்லை என்றார் கனிமொழி.
காவல் துறை மானியக் கோரிக் கையின்போது பேசிய முதல்வர், திமுக தலைவர் கருணாநிதி ஏன் பேரவைக்கு வரவில்லை. 2006ல் நான் தனியாக வந்து சட்டப்பேரவையில் பேசினேன். அந்த துணிச்சல் ஏன் அவருக்கு இல்லை என சவால் விடுத்துள்ளார்.
சட்டசபை நிகழ்வுகளில் பங் கேற்கும் வகையில் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தராமல் சவால் விடுவது கண்டனத்துக்கு உரியது. திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு சவால் விடுவதில் அர்த்தம் இல்லை.
அதிமுக ஆட்சியில் நடந்த பல தவறுகள், பிரச்சினைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்வதே இல்லை.
கருணாநிதிக்கு போதுமான இருக்கை வசதி செய்து தரப்படவில்லை. அவருடைய நாற்காலி வருவதற்கான வழியை கூட செய்து தருவதற்கு இந்த அரசு தயாராக இல்லை. அதனால், சவால் விடுவதில் அர்த்தம் இல்லை என்றும் கனிமொழி கூறியுள்ளார்.