லோக்சபா தேர்தல் களத்தில் குதிக்கிறார் கனிமொழி.. கிடைக்குமா வெற்றிக் கனி?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகள், கவிதாயினி, ராஜ்யசபா எம்பி, திமுகவின் டெல்லி முகம் என அறியப்படும் கனி்மொழி நேரடி தேர்தல் களத்தில் குதிக்க முடிவு செய்து விட்டார்.
தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருந்து வரும் கனிமொழி இதுவரை நேரடியாக மக்களைச் சந்தித்துத் தேர்தலில் போட்டியிட்டதில்லை.
கருணாநிதி குடும்பத்தில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் மட்டுமே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டவர்கள். அதற்கு அடுத்து முரசொலி மாறனும் அவரது மகன் தயாநிதி மாறனும் நேரடியாக மக்களைச் சந்தித்துப் போட்டியிட்டுள்ளனர்.
முதல் முறையாக
இவர்களைத் தவிர்த்து அந்தக் குடும்பத்தில் வேறு யாரும் நேரடி தேர்தலில் போட்டியிட்டதில்லை. அந்த நிலையை மாற்ற கனிமொழி நேரடியாக தேர்தல் களத்தில் குதிக்க ஆர்வமாக உள்ளாராம்.
ராஜ்யசபா பதவி முடிவதற்குள்ளாக
கனிமொழியின் ராஜ்யசபா பதவிக் காலம் 2019 வரை இருக்கிறது. ஆனால், அதுவரையில் எம்.பி.யாக இருக்க விரும்பவில்லையாம் கனிமொழி. அதற்குள்ளாகவே தேர்தலில் போட்டியிட விரும்புகிறாராம்.
லோக்சபா தேர்தலில்
அதற்கு முன்பாக வரவுள்ள லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட விரும்புகிறாராம். மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று வெல்ல விரும்புகிறாராம்.
3 தொகுதிகள் கையில்
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் போட்டியிட்டால் தனக்கு சாதகமாக இருக்கும் என இப்போதே விவாதிக்கத் துவங்கியுள்ளார் கனிமொழி. அந்த வகையில், தென்சென்னை, தஞ்சை, திருச்சி ஆகிய தொகுதிகள் சாதகமானது என தேர்வு செய்திருக்கிறாராம் கனிமொழி.