கிருஸ்துமஸுக்கு ஒரு சிறப்பு ரயில் கூட இல்லையே…. ஏக்கத்தில் கன்னியாகுமரி!
நாகர்கோவில்: கிருஸ்துமஸ் பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதில் கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள காரணத்தால் படித்த இளைஞர்கள் வேலைவாய்பிற்காக தலைநகரான சென்னையை நோக்கி படையெடுத்து அங்கு வேலை தேடி வசித்து வருகின்றனர்.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இரண்டு மார்க்கங்களிலும் பயணம் செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வீட்டுக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊரான குமரிக்கு விடுமுறைகளில் வந்து செல்வது வழக்கம்.
கிருத்துமஸ் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட ஏராளமானவர்கள் ரயிலில் செல்வார்கள் . குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இரண்டு இரவு நேர தினசரி ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் ஆண்டு முழுவதும் கூட்டம் நிரம்பிவழிகிறது. இதனால் குமரி மாவட்ட பயணிகள் சென்னைக்கு சென்றுவர முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
சென்னை-நாகர்கோவில் வழி தடம் தெற்கு ரயில்வே வழி தடங்களில் அதிக வருமானம் அளிக்கும் வழி தடம் ஆகும். பொதுவாக ரயில்வேத்துறை பல வருடங்களாகவே விடுமுறை நேரங்களில் சிறப்பு ரயில்களை நாகர்கோவில் சென்னை மார்க்கத்தில் அறிவித்து இயக்குவது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது ஆறு மாதகாலமாக சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் நெல்லையுடன் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில்களை தமிழகத்தின் கடைசி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து அறிவித்து இயக்கியிருக்க வேண்டும். அவ்வாறு இந்த ரயில்கள் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து புறப்படுமாறு இயக்கப்பட்டிருந்தால் குமரி மாவட்டத்தை சார்ந்த பயணிகள் தங்களின் மாநில தலைநகருக்கு செல்ல ரயில் வசதி கிடைத்திருக்கும்.
திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இந்த சிறப்பு ரயில்கள் இயக்க போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதே இந்த ரயில்கள் மதுரை கோட்டத்தின் கடைசி எல்லையான திருநெல்வேலியுடன் நிறுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயில்களை வரவேற்பதற்கும், நிறுத்தி வைப்பதற்கும் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் அனைத்தும் நெல்லையுடன் நிற்கிறது. இவ்வாறு இடம் இல்லையேன்றால் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சுவேலியிருந்து புறப்படமாறு இயக்கியிருக்கலாம்.
இவ்வாறு இயக்குவதற்கும் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த காரணத்தால் இந்த ரயில்கள் நெல்லையுடன் நின்றுவிடுகிறது.
குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் மார்க்கத்தில் அதிக ரயில்களை இயக்குவதை காட்டிலும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதை போன்று திருவனந்தபுரம் அல்லது கொச்சுவேலியிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கினால் மட்டுமே குமரி மாவட்டத்தில் இரண்டு மார்க்கங்களிலும் பயணிக்கும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் குமரி மாவட்ட ரயில் பயணிகள்.
நெல்லையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்
1. 00609 சென்னை எழும்பூர் (21:05) - திருநெல்வேலி (07:30) - 23-12-2014 பிரிமியம் ரயில்
2. 00611 சென்னை எழும்பூர் (22:45) - திருநெல்வேலி (12:30) - 24-12-2014 பிரிமியம் ரயில்
3. 06715 சென்னை எழும்பூர் (21:05) - திருநெல்வேலி (09:45) - 26-12-2014
4. 06717 சென்னை எழும்பூர் (22:45) - திருநெல்வேலி (12:30) - 22-12-2014
மறுமார்க்கம்
5. 06716 திருநெல்வேலி (21:15) - சென்னை ( 09:00) - 25-12-2014
6. 06718 திருநெல்வேலி (18:15) - சென்னை ( 07:15) - 21-12-2014
7. 06010 திருநெல்வேலி (09:40) - சென்னை ( 21:00) - 24-12-2014
இந்த சிறப்பு ரயில்களையும் நாகர்கோவில் வரை இயக்கியிருந்தால் சென்னையில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு கிருத்துமஸ் விடுமுறைக்கு ஊருக்கு வருவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
இந்த கிருஸ்துமஸ் சிறப்பு ரயில்களை நெல்லையிலிருந்து இயக்குவதால் குமரி மாவட்ட பயணிகள் மட்டும் கிருஸ்துமஸ் விடுமுறைக்கு சிறப்பு ரயில் வசதி கிடைக்காமல் கூட்ட நெரிசலில் சிக்கி பயணம் செய்ய வேண்டும். அல்லது அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பேருந்துகளில் பாதுகாப்பன்றி பயணம் செய்ய வேண்டியுள்ளது.
திருநெல்வேலிக்கு இவ்வளவு சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே நிர்வாகம் பெயரளவிற்காவது ஒரே ஒரு சிறப்பு ரயிலாவது நாகர்கோவிலுக்கு அறிவித்திருக்கலாம. இவ்வாறு அறிவிக்காதது குமரி மாவட்ட பயணிகளை வேண்டும் என்றே புறக்கணிப்பதாகவே தெரிகிறது.
கிருஸ்துமஸ் விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்வதற்கு ஜனவரி முதல் வாரத்திலாவது நாகர்கோவிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பதே சென்னையில் வசிக்கும் குமரி மாவட்ட ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.