தேரோடும் எங்க சீரான மயிலையிலே….
வீதிகளில் தேரோடினாலே உற்சாகம்தான்... ஊரெல்லாம் கூடி நின்று தேரிழுக்க... ஆடி அசைந்து... அழகுற மாட வீதிகளில் வலம் வரும் தேரினைக் காண கண்கோடி வேண்டும்.
இன்று நடைபெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தினை சென்னை மட்டுமல்லாது புறநகர் பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பர், திருநாவுக்கரசர், சம்பந்தர் உள்ளிட்ட சிவனடியார்கள் பாடல் பெற்ற இந்த திருத்தலத்தின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் திருவிழா
10 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் அதிகார நந்தி, வெள்ளிவிடை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தார்.
தேரோட்டம்
பங்குனிப் பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வந்தார்.
பக்தர்கள் தரிசனம்
வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலர், சண்டிகேஸ்வரர் தேர்கள் கபாலீஸ்வரரை பின் தொடர்ந்தன. மயிலை மாட வீதியில் ஆடி அசைந்து அழகுற வலம் வந்த திருத்தேரினை காண சாலையோரங்கள் மற்றும் உயர்ந்த கட்டிடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கவனமா பாருங்க...
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது அவர்கள் பெண் பக்தர்களின் கழுத்த கவர் பண்ணுங்க, செயினை கவர்பண்ணுங்க என்று அறிவுறுத்தினர்.
பனையோலை விசிறி
வெயிலின் தாக்கத்தை தணிக்க தேர் இழுத்த பக்தர்களுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்தும், பனையோலை விசிறி வீசியும் ஏராளமானோர் பணிவிடை செய்தனர்.
கிராமத்து பாணியில்
சென்னையின் மையப்பகுதியில் இருந்தாலும் மயிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா கிராமத்து பாணியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
63 மூவர் திருவிழா
பங்குனித் திருவிழாவின் முக்கிய அம்சமான அறுபத்து மூவர் திருவிழா நாளை நடைபெறுகிறது. 63 நாயன்மார்களும் வீதி உலா வரும் போது அவர்களுக்கு வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி கபாலீஸ்வரர் காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும்.