சட்டசபை காங். குழு தலைவராக கே.ஆர். ராமசாமி; கொறடாவாக விஜயதாரணி தேர்வு
சென்னை: தமிழக சட்டசபை காங்கிரஸ் குழுவின் தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமி, கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை காங். குழு தலைவர் பதவிக்கு விஜயதாரணியும் நாங்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமாரும் முயற்சித்தனர்.
அப்போது விஜயதாரணி தலைமையில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவப் போவதாக வதந்திகள் கிளம்பின. தமக்கு காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய வதந்திகள் கிளப்பிவிடப்படுவதாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தும் மன்னார்குடி வகையறாக்களின் உறவினரான காரைக்குடி கே.ஆர். ராமசாமியை காங்கிரஸ் குழு தலைவராக்கி சட்டசபையில் அக்கட்சியின் தீவிர செயல்பாட்டைத் தடுக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சென்னையில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களள சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமியும் கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கடந்த சட்டசபையிலும் விஜயதாரணி கொறடாக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் மாநில கமிட்டித் தலைவர் பதவிக்கு இணையானது காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.