நகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற கவனக்கலை பயிற்சி: மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
காரைக்குடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றலை மேம்படுத்துதல் மற்றும் கவனக்கலை பயிற்சி கொடுக்கப்பட்டது.
சிவகங்கை: காரைக்குடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றலை மேம்படுத்துதல் மற்றும் கவனக்கலை பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் தமிழக அரசின் குறள் பரிசு பெற்ற திருக்குறள் திலீபன் கலந்துகொண்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கடந்த 6ஆம் தேதி தமிழக அரசின் குறள் பரிசு பெற்ற திருக்குறள் திலீபன் அவர்களின் நினைவாற்றல் மற்றும் கவனக் கலை பயிற்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் வரவேற்றார்.
திருக்குறள் திலீபன் அவர்கள்1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல, அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல், பிறந்த தேதி முதல், முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும், உடன் கிழமையைச் சொல்லுதல், உலக நாடுகளின் பெயர்களைச் சொன்னால், அந்நாட்டுத் தலைநகரத்தின் பெயரைச் சொல்லுதல், திருக்குறளின் முதல் சீரைச் சொன்னால், குறளைச் சொல்லுதல், குறளைச் சொன்னால், குறளின் எண்ணைச் சொல்லுதல், குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்ற பல்வேறு செயல்கள் மூலம் தனது நினைவாற்றலை மாணவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். மாணவர்கள் அவரது நினைவாற்றலை மிகவும் ஆர்வத்துடன் சோதித்து பார்த்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் அவர்கள் செய்திருந்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.