ஏவுகணையின் தந்தை அப்துல் கலாமிற்கு காரைக்குடி பள்ளி மாணவிகள் நினைவு அஞ்சலி
மக்கள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிற்கு காரைக்குடி பள்ளி மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நாகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று ஏவுகணையின் தந்தை ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு இரண்டாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காரைக்குடி நகராட்சி ஆணையாளர் திருமதி சுந்தராம்பாள் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அப்துல் கலாம் நினைவாக மரக்கன்று நடப்பட்டது.
அப்துல் கலாம் அவர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சொன்ன பொன்மொழிகளை அனைவரும் அறியும் வகையில், மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை காரைக்குடி நகராட்சி ஆணையாளர் திருமதி. சுந்தராம்பாள் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மாணவர்கள் பேரணி
ஆசிரியர்களும் மாணவர்களும் அப்துல்கலாம் பொன்மொழிகள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி பேரணியாக வந்தனர். இப்பேரணியானது பள்ளியில் துவங்கி அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை, 1௦௦ அடி ரோடு, தேவர் சிலை வழியாக கண்ணதாசன் மண்டபத்தில் நிறைவுற்றது.
வண்ண கோலம்
ஆசிரியர்கள் மற்றும்மாணவர்கள் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள். ஏழாம் வகுப்பு மாணவர்கள், அவரது உருவத்தை, வண்ணக் கோலமாக வடிவமைத்திருந்தனர்.
கலாமிற்கு அஞ்சலி
அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, பள்ளியின் முன்புறம் மரக்கன்று நடப்பட்டது. இந்நாளில் மாணவர்கள் அப்துல் கலாம் அவர்களின் கவிதைகளையும், தத்துவங்களையும் சொல்லியும், அவரைப் பற்றி பாடல்களை பாடியும், அவரின் வாழ்க்கை வரலாற்றை கூறியும் அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்கள்.
மரம் நடும் விழா
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மரம் நடுவிழாவில் காரைக்குடி வடக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் சண்முகநாதன், சதிஷ்குமார் மற்றும் மைக்கேல் மரக்கன்றை நட்டனர்.
பங்கேற்றவர்களுக்கு நன்றி
பள்ளி தலைமையாசிரியர் திரு.ஆ.பீட்டர்ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் பட்டதாரி ஆசிரியை திருமதி. கோமதி ஜெயம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் விஜயலட்சுமி மற்றும் கோமதி அவர்கள் செய்திருந்தார்கள்.