அப்பல்லோவில் ஜெயலலிதா உடல் நலன் விசாரித்தார் அதானி மகன்
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து அதானி குழுமத்தைச் சேர்ந்த கரண் அதானி செவ்வாய்க்கிழமை கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது லண்டன் மருத்துவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களிடம் விசாரித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து அதானி குழுமத்தைச் சேர்ந்த கௌதம் அதானியின் மகன் கரண் அதானி கேட்டறிந்தார்
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், "அகமதாபாத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகவே சென்னை வந்துள்ளேன். இங்கு மருத்துவமனையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்தேன். அவருடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் இருந்தார். இருவருமே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல முறையில் தேறி வருவதாகக் கூறினர். அவரது உடல்நிலை வெகு விரைவில் பூரண குணமடைய வேண்டுன் என பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.