காவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும்: வாசன்
சென்னை: கர்நாடக அரசு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் கடந்த 7 வருடங்களாக குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பெரும் கவலை அடைந்துள்ளனர். தற்போது சம்பா சாகுபடிக்காக தண்ணீர் காவிரியிலிருந்து வருமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் காத்துக்கிடக்கிறார்கள்.
இச்சூழலில் காவிரி நதிநீர் பங்கீட்டின் படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேற்பார்வைக் குழுவும், உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கர்நாடக அரசு - கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைக்கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
மேலும், காவிரியில் கர்நாடக மாநில குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பதாக தெரிவித்திருப்பதும், தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்துவிட்டு, இப்போது சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்கிறார்கள் என்றும் கர்நாடக முதல்வர் தெரிவித்திருப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. இது ஏற்படையதல்ல. கர்நாடக அரசின் இந்த தீர்மானம் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதிக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் கர்நாடக அரசு மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தியிருப்பது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செயல்.
எனவே, மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசோடு நேரிடையாகத் தொடர்பு கொண்டு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவிற்குள் அமைத்திட வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசோடு தொடர்பு கொண்டு காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.