காவிரி நீர் திறப்பு, மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனு!
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்; மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவுகளில் திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு 6 நாட்களுக்கு 6,000 கன அடி நீரை திறக்க வேண்டும்; 4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் நேற்றைய புதிய உத்தரவு. இந்த உத்தரவை கர்நாடகா அரசு கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை.
ஆனால் உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி கர்நாடகா அரசு இன்று தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடவில்லை. இன்று அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது கர்நாடகா அரசு.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஒரு புதிய திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கவிடும் உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவு ஆகியவற்றில் திருத்தம் கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலும் கர்நாடகா அரசு மனுத் தாக்கல் செய்திருப்பது அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.